கர்நாடக அரசை கலைக்க முயற்சியா?... பாஜக மீது சித்தராமையா காட்டம்
பெங்களூர்: மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கும் பாஜக மீது மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா காட்டமாக பேசி இருக்கிறார்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் மஜத - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது. மேலும், 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக அரசை கலைப்பதற்கு பாஜக தலைமை முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சில கருத்துக்களை காட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவோ அல்லது சட்டசபையை கலைக்கவோ எந்த திட்டமும் இல்லை.
மத்தியில் ஆட்சி அமைப்பதற்கே பாஜகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அது கர்நாடக அரசுக்கு எதிராக இல்லை. இது முற்றிலும் முட்டாள் தனமாக உள்ளது. பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருப்பது மத்தியில் ஆட்சி நடத்துவதற்குதான். அது கர்நாடக அரசை முடக்குவதற்காக அல்ல, என்று அவர் கூறி இருக்கிறார்.
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் சுதாகர் ஆகியோர் பாஜக தலைவர் ஆர்.அசோக் மற்றும் பாஜக மூத்த தலைவர் எஸ்எம்.கிருஷ்ணா ஆகியோரை சந்தித்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை ஆபரேஷன் கமலா திட்டத்தின் மூலமாக தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்வதாக புகார்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில், சித்தராமையா பேசியுள்ளார். மேலும், முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் எம்பி.பாட்டீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.