எடியூரப்பாவுக்கு கல்தா கொடுக்க பாஜக திட்டம்.. கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
பெங்களூர்: வரும் 2023 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை ஓரங்கட்ட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா கடந்த ஜூலை 2019-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். பாஜகவில் 75 வயதை அடைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கர்நாடகாவில் மஜதவும் காங்கிரஸும் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. எனினும் காங்கிரஸ்- மஜதவில் சிலர் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் போர்க் கொடி எழுப்பினர். இதையடுத்து அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
ஜஸ்ட் 10 வினாடிதான்.. பயங்கர சத்தமாக வெடித்த பலூன்கள்.. பரவிய தீ.. சென்னை பாஜக நிகழ்ச்சியில் பகீர்
செல்வாக்கு
அப்போது பாஜகவிடம் பெரும்பான்மை இருந்த நிலையில் அந்த மாநிலத்தை பொருத்தவரை எடியூரப்பாதான் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவர் முதல்வராக அறிவிக்கப்பட்டு தற்போது பதவியில் இருந்து வருகிறார். 75 வயதை எட்டினாலும் அது அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல்
வரும் 2023-ஆம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் புதிய தலைவர் ஒருவரை முன்னிறுத்த பாஜக முடிவு செய்து அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. அதற்காக எடியூரப்பாவுக்கு நிகரான லிங்காயத் சமூகத்தில் உள்ள ஒரு தலைவரின் செல்வாக்குகளை உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.
நிச்சயம்
எடியூரப்பாவுக்கு மாற்றாக தற்போது துணை முதல்வராக உள்ள லட்சுமணன் சவதியை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்தது. ஆனால் அவருக்கு கட்சியில் ஆதரவு குறைவாகவே உள்ளது. அதனால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டரை வரும் 2023-ஆம் ஆண்டு முதல்வராக முன்னிறுத்தினால் நிச்சயம் வெல்ல முடியும் என பாஜக கணக்கு போடுகிறது.
சமூகம்
கர்நாடகாவில் பெரும்பாலானவர்கள் லிங்காயத் சமூகத்தினர் என்பதால் அவர்களின் வாக்குகளை கவர இதுதான் சரியான வழி என்றும் கட்சி தலைமை நினைக்கிறது. ஆனால் எடியூரப்பாவுக்கோ லிங்காயத் சமூகம் இல்லாமல் மற்ற சமூகத்திலும் ஆதரவு உள்ளதாகவே சொல்லப்படுகிறது. எனவே எடியூரப்பாவை மீறி எப்படி வெல்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எல்லாம் சரி இப்போது இருக்கும் சிக்கலே.... எடியூரப்பா அவ்வளவு எளிதில் தனது பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்கிறார்கள்.
எடி ஆதரவாளர்கள்
இதனால் நிச்சயம் எடியூரப்பா ஆதரவாளர்கள் தனித்து இயங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களிடம் வாக்கு வாங்குவது கூட எளிது. ஆனால் எடியூரப்பாவை எப்படி சமாதானப்படுத்துவது என்பதுதான் பாஜக தலைமைக்கு ஏற்பட்டுள்ள பெரிய தலைவலி ஆகும்.
முதல்வர் வேட்பாளராகலாம்
எனவே ஒன்று எடியூரப்பாவின் மகனை பாஜக தலைமை முன்னிறுத்தலாம். அல்லது எடியூரப்பா கைகாட்டும் நபரை முதல்வர் வேட்பாளராக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் எடியூரப்பாவை சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள்.
மற்ற நிர்வாகிகள்
ஏற்கெனவே தற்போதைய ஆட்சியில் எடியூரப்பாவின் மகனின் தலையீடு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கட்சியினர் எடியூரப்பாவின் மகனுக்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றே கூறப்படுகிறது. அத்துடன் மூத்த தலைவர்கள் இருக்க எடியூரப்பாவின் மகனை முன்னிறுத்தினால் மற்ற நிர்வாகிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சமும் பாஜக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.