பெங்களூர் அருகே பயங்கரம்.. பாஜக எம்எல்ஏ ஓட்டிய கார் தாறுமாறாக ஓடி.. 2 பேர் பலி
பெங்களூர்: கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் கார் மோதியதில் சாலையோரம் நின்ற 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
உடுப்பி அருகேயுள்ள கொல்லூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பெங்களூரைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர் தங்கள் காரில் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தனர். தும்கூர் மாவட்டம், குனிகல் அருகே நேற்று இரவு வந்தபோது, சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிப்பதற்காக இறங்கி உள்ளனர்.
அப்போது அதே வழியாக வேகமாக வந்த கர்நாடக பாஜக பொதுச் செயலாளரும், சிக்மகளூர் தொகுதி எம்எல்ஏவுமான சி.டி. ரவி பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில், நின்று கொண்டிருந்த காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். சி.டி. ரவி மற்றும் அவரது டிரைவர் உட்பட நான்கு பேர் சிறு காயமடைந்தனர். சி.டி. ரவி இடது பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்தார். இந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்வால், காரின் டேஷ்போர்டு பகுதிக்கு தூக்கிவீசப்பட்டதால் அவரது நெஞ்சில் லேசான காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து, கர்நாடக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் எஸ்.சாந்தராமன் கூறியதாவது: விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வரை, சி.டி. ரவி பாதிக்கப்பட்டவர்களுடன்தான் இருந்தார். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, போலீஸ் அனுமதியோடு, அந்த இடத்திலிருந்து சி.டி. ரவி புறப்பட்டார் என்று விளக்கமளித்தார். சி.டி. ரவி காரை ஓட்டிச் செல்லவில்லை என்றும், அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இல்லை என்றும் எஸ். சாந்தராமன் கூறினார்.
ஆனால், சி.டி. ரவி மற்றும் அவரது கார் ஓட்டுனர்தான், இந்த விபத்துக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் கூறி உள்ளனர். சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.டி. ரவியின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 279, 336 மற்றும் 304A பிரிவுகளின் கீழ் குனிகல் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.