இதனால் சகலமானவருக்கும்... கர்நாடகா முதல்வர் பசவராஜ் மாற்றம் இல்லை- பதற்றத்துடன் மறுக்கும் பாஜக!
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார். பாஜகவில் நீடித்து வரும் உட்கட்சி குழப்பத்தால் பசவராஜ் பொம்மையை மேலிடம் மாற்றப் போகிறது என்கிற தகவல் சீரான இடைவெளியுடன் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கிறது.
பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி மாற்றப்பட்டு பூபேந்திர பட்டேல் நியமிக்கப்பட்டார். குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதால் முதல்வர் பதவியில் பாஜக மேலிடம் மாற்றம் செய்தது. இதே பார்முலாவை கர்நாடகாவிலும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜகவில் ஒரு தரப்பினரின் கோரிக்கை.
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் முதல்வர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேலிடம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பசவராஜ் எதிர்ப்பு கோஷ்டியான முன்னாள் முதல்வர் எடியூரப்பா தரப்பு வலியுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக பாஜக மேலிடத் தலைவர்கள் கர்நாடகா சென்றாலே, முதல்வர் மாற்றம் குறித்துதான் ஆலோச்னையா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பி. சுரேஷ் கவுடா அண்மையில் முதல்வரை மாற்றம் செய்வது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக கொளுத்திப் போட்டார். அதுவும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்கு முன்னதாக பசவராஜ் பொம்மை, முதல்வர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டு புதிய முதல்வர் நியமிக்கப்படுவார் என சுரேஷ் கவுடா கூறினார். இதனால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு கிளம்பியது. கர்நாடகா எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இதை கையில் எடுத்துக் கொண்டு முதல்வர் பசவராஜ் பொம்மையை விமர்சித்தது.
இந்த சூழ்நிலையில் முதல்வர் பசவராஜ் மாற்றப்படமாட்டார் என கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்
அவசரம் அவசரமாக மறுத்துள்ளனர். அதேபோல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கிறது. இந்நிலையில் ஏன் முதல்வரை மாற்றம் வேண்டும்? அதற்கான தேவை இப்போது இல்லை என கூறியுள்ளார்.