கர்நாடகாவில் ராகுல் காந்தி கால் வைத்ததுமே பரபர.. போஸ்டர்கள் கிழிப்பு.. பாஜக அடாவடி என குற்றச்சாட்டு
பெங்களூர்: ராகுல் காந்தி இன்று கர்நாடகாவில் தனது பாத யாத்திரையைத் தொடங்கி உள்ள நிலையில், அங்கு பாஜக செய்த சம்பவம் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இப்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவொரு சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்ந்து போகியுள்ளன. அடுத்து 2024இல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குக் காங்கிரஸ் மிக விரைவில் தாயாராக வேண்டிய சூழலில் உள்ளது.
தமிழக மசூதியில் ஒலித்த பாங்கு.. 2.45 நிமிடம் பேச்சை நிறுத்தி காத்திருந்த ராகுல்.. வெளியான வீடியோ
ராகுல் காந்தி
இந்தச் சூழலில் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றுள்ளார். பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் இந்த பேரணி கடந்த மாதம் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், இது காஷ்மீரில் நிறைவடைகிறது. மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக இந்த பாத யாத்திரை செல்லும் நிலையில், ராகுல் காந்தி 150 நாட்களுக்கு 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடகா
முதல் சில நாட்கள் தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அடுத்து கேரளாவில் நடைப்பயணம் சென்றார். காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால் அங்கு மொத்தம் 19 நாட்கள் பாத யாத்திரை மேற்கொண்டார். இந்தச் சூழலில் இன்றைய தினம் அவர் கர்நாடகாவில் பாத யாத்திரை தொடங்கி உள்ளார். அங்கு மொத்தம் 21 நாட்கள் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்ல உள்ளார்.
சித்தராமையா
கர்நாடகாவுக்கு வரும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் காங்கிரஸ் பேனர்களை கிழித்து தேசப்படுத்தினர். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா எச்சரிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
போஸ்டார்கள்
இது தொடர்பாக அவர் பேசுகையில், "எங்கள் போஸ்டர்களையும் பேனர்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள். இதை அவர்கள் தொடர்ந்து செய்தால், கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு அந்தளவுக்குச் சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக நான் போலீசாரிடமும் பேசி உள்ளேன்.
போலீசாருக்கு எச்சரிக்கை
அவர்கள் தேவையில்லாமல் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி தருகிறது. போலீசாருக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இன்னும் ஆறே மாதத்தில் நிச்சயம் அரசு மாறும். காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை அமைக்கும். எனவே, கவனமாக நடந்து கொள்ளுங்கள். அனைத்து போலீசாருக்கும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கர்நாடகா
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு காங்கிரஸை உற்சாகப்படுத்தும் வகையில் தான் ராகுல் காந்தி 21 நாட்கள் பாத யாத்திரை செல்வது குறிப்பிடத்தக்கது.