சபாநாயகர் இனியும் எதுவும் செய்ய கூடாது.. செக் வைக்க முடிவெடுத்த பாஜக.. களமிறங்கிய எடியூரப்பா!
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நமபிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக கட்சி முடிவு எடுத்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நமபிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக கட்சி முடிவு எடுத்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் கலைந்தது. 16 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கலைந்தது.
இதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நாளை எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க உள்ளது.
என்ன திட்டம்
இதற்கு இடையில் தற்போது கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக கட்சியை முடிவு எடுத்துள்ளது. பொதுவாக சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அவரின் பலத்தை மொத்தமாக குறைக்க கூடியது ஆகும்.
எப்படி நடக்கும்
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அவையில் சபாநாயகர் அதற்கு முன் வேறு எந்த நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த முடியாது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இருக்கும் போது அவர் எம்எல்ஏக்கள் யாரையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதேபோல் அவர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்த முடியாது.
முக்கியம்
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இருக்கும் போது, அவர் முதலில் தன் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதன்பின்புதான் சபாநாயகர் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதே சமயம் சபாநாயகர் மீது நடக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவர் தோல்வி அடைந்தால், உடனே அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பின் புதிய சபாநாயகர் பதவி ஏற்பார்.
ஏன் புதியவர்
பின் புதிய சபாநாயகர்தான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போது முன்னிலை வகிப்பார். இந்த நிலையில் நாளை காலை எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன், சபாநாயகர் ரமேஷ் குமார் மீது எடியூரப்பா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் அவர் நாளை பாஜகவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.
செக்
ரமேஷ் குமாருக்கு செக் வைக்க வேண்டும் என்று பாஜக இந்த திட்டத்தை போட்டுள்ளது. 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் காரணமாக தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 207 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 104 எம்.எல்.ஏக்கள். சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.
இழப்பார்
காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் பலம் 100 ஆக உள்ளது. இதனால், நாளை சபாநாயகர் ரமேஷ் குமார் மீது பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், ரமேஷ் குமார் தோல்வி அடையவே வாய்ப்புள்ளது, இதனால் அவர் பதவி இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.