முஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தாவங்கரே மாவட்டம் கொனல்லி தொகுதி பாஜக எம்எல்ஏவும், முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகருமான ரேணுகாச்சார்யா, முஸ்லிம் சமுதாயத்தினரை குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
திங்களன்று தாவங்கேரில் நடந்த சிஏஏவுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ரேணுகாச்சார்யா, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்களில் சிலரை துரோகிகள் என்று அழைத்தார்.
அந்த கூட்டத்தில் ரேணுகாச்சார்யா பேசுகையில். "ஒரு சில துரோகிகள் மசூதிகளில் அமர்ந்து ஃபத்வாக்களை வழங்குகிறார்கள். மசூதிகளில் என்ன இருக்கிறது?
மசூதி வேண்டுமா
நீங்கள் (முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிடுகிறார்) அங்கே பிரார்த்தனை செய்கிறீர்களா? தொழுவதற்கு பதிலாக, நீங்கள் ஆயுதங்களை சேகரிக்கிறீர்கள். இதனால்தான் உங்களுக்கு மஸ்ஜித் வேண்டுமா? இதனால்தான் உங்களுக்கு ஒரு மசூதி வேண்டுமா? "என்றார் ரேணுகாச்சார்யா.
முஸ்லீம்களுக்கு நிதியில்லை
சட்டமன்ற உறுப்பினராக நான் , முஸ்லீம் சமூகத்தின் நலனுக்காக நிதி ஒதுக்க மாட்டேன், அதற்கு பதிலாக இந்து மக்களுக்கு நிதி திருப்பிவிடுவேன். நான் உங்களை (முஸ்லிம்களை) உங்கள் இடத்தில் நிறுத்தி அரசியல் என்றால் என்ன என்பதைக் காண்பிப்பேன் "என்று ரேணுகாச்சார்யா கூறினார்.
சோமசேகரரெட்டி மிரட்டல்
பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக இப்படி பேசுவது இது முதல்முறை அல்ல. பாஜக எம்எல்ஏ சோமசேகரரெட்டி முன்னதாக ஜனவரி 2ம் தேதி பெல்லாரியில் இதேபோன்ற சிஏஏ ஆதரவு போராட்டத்தில் பேசுகையில் "போராட்டம் நடத்துபவர்கள் 5 சதவீதம், மொத்த மக்களும் உங்களுக்கு எதிராக வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்து பாருங்கள். ‘
நாங்கள் 80 சதவீதம்
காங்கிரஸ் கட்சியினர் முட்டாள்கள். அவர்களின் பேச்சை நம்பாதீர்கள். நீங்கள் மொத்தமே 17 சதவீதம் தான். நாங்கள் 80 சதவீதம் நாங்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் உங்கள் நிலைமை என்ன என்பதை நினைத்து பாருங்கள்" என்று பேசியிருந்தார்.