கோட்சே ஒருவரைதான் கொன்றார்.. ராஜிவ் காந்தி கொன்றது 17,000 பேர்.. பாஜக எம்.பி பகீர் ட்வீட்
Recommended Video
பெங்களூர்: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு, பாஜக வேட்பாளர், சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் வக்காலத்து வாங்கி சர்ச்சையில் சிக்கிய நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முக்கிய தலைவரும், எம்பியுமான நளின் குமார் கட்டீல் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய கருத்து, நாடு முழுக்க பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண் சாமியாரும், போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கூடியவருமான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், அன்றும், இன்றும், என்றும் கோட்சே ஒரு, தேசபக்தர் தான் என்று தெரிவித்தார்.
தப்பிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.. கான்வாய் காரை 'கவிழ்த்த' பசு மாடு!
மன்னிப்பு கேட்ட பிரக்யாசிங்
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, தேச பக்தர் என்றால், மகாத்மா காந்தி தேசவிரோதியா என்று எதிர்கட்சியினர் சரமாரி கேள்விகளை முன்வைத்தனர். கேள்விக்கணைகளை தாக்குபிடிக்க முடியாத பிரக்யாசிங் தாக்கூர், இறுதியில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் மற்றொரு பாஜக பிரமுகர் நளின் குமார் கட்டீல் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யார் பெரிய கொலைகாரர்
அவர் கூறுகையில், நாதுராம் கோட்சே, கொன்றவர் எண்ணிக்கை 1 மட்டுமே. தீவிரவாதி அஜ்மல் கசாப் கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 72. ராஜீவ்காந்தி கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரம். இப்போது நீங்களே சொல்லுங்கள். இவர்களில் மிக மோசமான கொலைகாரர் யார்? இவ்வாறு ட்வீட்டில் நளின் குமார் கட்டீல், கேள்வி எழுப்பியுள்ளார்.
கலவர சம்பவம்
ராஜீவ்காந்தி கொலை செய்ததாக பாஜக எம்பி குறிப்பிட்டுள்ள சம்பவம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலரால், சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு சீக்கியர்களுக்கு எதிராக 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவங்களைத்தான், என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீக்கியர் கலவரம்
சமீபத்தில், சீக்கியர் கலவரம் விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தாக்குதலை தொடுத்தார். இப்போது, அதை விவகாரத்தை, உதாரணத்தை பாஜக எம்பியும் கையில் எடுத்துள்ளார். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, மூன்று நாட்கள் தொடர்ந்த கலவரத்தில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.