தேஜஸ்வி முறைகேட்டை "கண்டுபிடித்து" 3 நாளாகியும் பெங்களூரில் நோயாளிகளுக்கு பெட் இல்லை! ஜஸ்ட் ஸ்டன்ட்?
பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக பாஜகவைச் சேர்ந்த பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று நாட்களாகியும் இன்னமும் பெங்களூரில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது.
எனவே, தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு உண்மைதானா அல்லது வெறும் மீடியாவுக்கு கொடுக்கப்பட்ட போஸ்தானா என்ற சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு, பெருநகர பெங்களூர் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மண்டல வாரியாக வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது . அங்கிருக்கும் அதிகாரிகள் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பேசி நோயாளியின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொண்டு படுக்கை வசதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால், சமீபகாலமாக பெங்களூரில் எந்த ஒரு மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை என்று பதில் வருகிறது.
எடியூரப்பா அரசு நிர்வாக தோல்வியடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில், திடீரென பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பொம்மனஹள்ளி தொகுதி எம்எல்ஏ சதீஷ் ரெட்டி ஆகியோர் ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூரு தெற்கு வார் ரூம் அறைக்கு சென்று 17 முஸ்லிம் ஊழியர்கள்தான், படுக்கையை புக் செய்து வைத்து பணத்துக்கு அவற்றை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
பாஜகவை சேர்ந்த இவர்கள் பாஜக ஆட்சியின் கீழ் இருக்கும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக் கேட்கிறார்கள் என்று முதலில் பாராட்டுக்கள் எழுந்தன. ஆனால் இது அனைத்தும் மீடியாவுக்கும், பாஜக அரசின் செயலின்மையை மறைப்பதற்காகவும் நடத்தப்பட்ட நாடகம் என்று இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏனென்றால் 220க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கட்டுப்பாட்டு அறையில் 17 ஊழியர்களை, அதுவும் முஸ்லிம் ஊழியர்களை மட்டும் தேர்வு செய்து இந்த விஷயத்தில் மத துவேஷம் செய்து மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் பற்றி வெறுப்பை ஏற்படுத்துவதற்கு தேஜஸ்வி சூர்யா முயற்சி செய்துள்ளார் , இதன்மூலம் எடியூரப்பா அரசின் செயலின்மையை மறைக்க முற்பட்டு உள்ளார் என்பது காங்கிரஸ் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இதை உறுதி செய்யும் வகையில், தேஜஸ்வி சூர்யா குற்றம் சுமத்தி காவல்துறையில் பட்டியல் கொடுத்து மூன்று நாட்கள் ஆனபிறகும் கூட, இதுவரை பெங்களூரில் ஆக்சிஜன் வசதியுடன் அல்லது வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதி எந்த ஒரு மருத்துவமனையிலும் காலியாக இல்லை. ஒருவேளை இந்த 17 பேர் மட்டும் தான் தவறு செய்திருப்பார்கள் என்றால் அவர்கள் அடையாளம் காணப்பட்டு, புக்கிங் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அனைத்து படுக்கைகளும் ஓபன் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியில்லை. எந்த ஒரு நோயாளி மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து பெட் வேண்டுமென்று கேட்டாலும் எங்கும் காலி இல்லை.. காலியான பிறகு சொல்கிறோம் என்பது பதிலாக வருகிறது.
ஆனால் தேஜஸ்வி சூர்யா இதுபோல கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பட்டியல் கொடுத்ததும்.. பாஜக சார்பிலான சமூக வலைத்தளங்களில் பெங்களூரு நகரில் தற்போது படுக்கை வசதி தாராளமாக கிடைக்கிறது.. தேஜஸ்வி சூர்யா முயற்சிதான் இதற்கு காரணம் என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இன்று வரையிலும்கூட மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு யார் தொலைபேசியில் அழைத்து நோயாளிக்கு படுக்கை வசதி வேண்டும் என்று கேட்டாலும், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
ஆகமொத்தம் அரசின் நிர்வாக தோல்வியை மறைப்பதற்காக தேஜஸ்வி சூர்யா இது போல நடந்து கொண்டதாகவும், அதிலும் மதத் துவேஷம் தூவி இப்பிரச்சினையை வேறு வகையில் திசை திருப்பி, உண்மையான பிரச்சனைகளை மக்களை மறக்க வைக்க முயற்சி நடந்திருப்பதாகவும், நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, டுவிட்டரில், #TejasviSuryaExposed என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.