எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்க கூடாது என்பதே பாஜக-வின் லட்சியம்.. எடியூரப்பா பேட்டி
பெங்களூரு: இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருக்க கூடாது என்பதே, பாஜக-வின் லட்சியம் என கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. ஊழல்களால் மாநிலத்தின் வளர்ச்சி பெரிதும் தடைப்பட்டுள்ளது. காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது. ஆனால் இந்த ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, கர்நாடகம் முழுவதும் பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தார்.
பாஜக சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் கட்சி சார்ந்த போராட்டமாக இருக்காது. இதில் பெருந்திரளாக பொதுமக்களும் பங்கேற்பார்கள். எனவே இந்த போராட்டங்கள் நிச்சயம் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்றார். கடந்த ஓராண்டாக நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்த குமாரசாமி, தற்போது கிராமங்களில் தங்கி நாடகமாட உள்ளதாக சாடினார் எடியூரப்பா.
தென்னிந்தியாவை பொறுத்த வரை கர்நாடகாவில் மட்டும் தான் பாஜக பலமாக உள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் பாஜகவிற்கு போதிய அடித்தளம் இல்லை. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மேற்கண்ட 3 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக-விற்கு இளைஞர்களின் ஆதரவு சற்று கூடியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து பாஜகவின் வளர்ச்சியை அந்த மாநிலங்களில் முன்னெடுத்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார். மோடி கடந்த முறை பிரதமராக பதவியேற்ற பின்னர், பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நாட்டின் கவுரவத்தை நிலைநாட்டினார். இந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவதே பாரதிய ஜனதாவின் முக்கிய லட்சியம்.
ஓபிஎஸ் vs எடப்பாடி.. தர்மயுத்தம் பார்ட் 2? தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு
அதற்காக காங்கிரஸ் எதிர்கட்சியாக கூட இருக்க கூடாது, முற்றிலும் அழிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. எந்த மாநிலத்திலும் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்க கூடாது என்று தான் நாங்கள் நினைக்கிறோம் என குறிப்பிட்டார்.
தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. எதிர்காலத்தில் அந்த மாநிலங்களில் எல்லாமும் பாஜக ஆட்சி செய்யும் காலம் விரைவில் வரும் என்றார். கருப்பு பண ஒழிப்பிற்காக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்த்து, அதை பதுக்கி வைத்துள்ளவர்கள் கடும் பீதியடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற பாஜக எம்.பி.க்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மாநில அரசு மக்கள் பிரச்சனைகளை கேட்க தயாராக இல்லை. எனவே பாஜக எம்.பி.க்கள் மக்களின் குறைகளை களைய பாடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.