தேர்தலை சந்திக்காமல் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முடிவு.! அமித் ஷா தீவிர வியூகம்
பெங்களூரு: கூட்டணி ஆட்சியை சேர்ந்த தலைவர்கள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திப்பதற்கான மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எப்படியாவது கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அமித்ஷா தீவிர வியூகம் வகுத்து வருகிறார்.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் மஜத - காங்கிரஸார் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து, கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக தொடர் முயற்சி எடுத்தது.
ஆனால் மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருக்க, பாஜக மேலிட தலைவர்கள் கர்நாடக பாஜகவினருக்கு உத்தரவிட்டனர். தேர்தல் முடிந்த பின்னர் கர்நாடக அரசை கவிழ்ப்பது குறித்து முடிவெடுக்க சொல்லி இருந்தனர்.
திண்டுக்கல் லியோனிக்கு திடீர் சுகவீனம்.. புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை
மக்களவை தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்று தற்போது பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சியமைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக கூட்டணி ஆட்சியில் மோதல்கள் அதிகரித்து வருவதால், கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க மஜத - காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் தேர்தலை நடத்தாமல் பாஜக ஆட்சியை பிடிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க கூடாது என அக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவோ, கர்நாடகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட கூடாது. அதே சமயம் பாஜக-வும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என நினைக்கிறார். இதனையடுத்து கூட்டணி ஆட்சி அதுவாகவே கலைவதற்குள், ஆபரேஷன் தாமரை மூலம் இரு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்.
இதன் மூலம் ஆட்சியை பிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இன்னும் ஒரு மாதத்திற்குள் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளுங்கள் என, மாநில பாஜகவிற்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியை, எடியூரப்பா தலைமையிலேயே மேற்கொள்ள அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக மாநில பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா டெல்லிக்கு சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்தார். அப்போது மஜத கட்சியுடன் கூட்டணி அமைத்ததால், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினார். தற்போதைய நிலையில் இதே கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என விளக்கியுள்ளார்.
எனவே கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திப்பதற்காக சித்தராமையா தலைமையில் காங்கிரஸார் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சமீபத்தில் பேசிய தேவகவுடா, கூட்டணி ஆட்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியாது என பேசியிருந்தார்.
இந்நிலையில் தான் கூட்டணி ஆட்சி கவிழும் முயற்சியை தடுத்து நிறுத்தி, தேர்தலை சந்திக்கும் சூழலை தவிர்க்க பாஜக திட்டம் வகுத்து வருகிறது. கர்நாடகத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாமல் பாஜக ஆட்சியை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள, அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்கான வியூகங்களையும் அவரே வகுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.