கர்நாடகா, கோவாவில் கூண்டோடு கட்சி தாவல்.. "ஒரே நாடு... ஒரே கட்சி".. பாஜகவின் அடுத்த அஜெண்டா?
பெங்களூரு: கர்நாடகா மற்றும் கோவாவில் கூண்டோடு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது, கட்சி தாவ வைப்பது என வேகம் காட்டுவது ஒரே தேசம்...ஒரே கட்சி என்கிற புதிய அஜெண்டாவை பாஜக செயல்படுத்துகிறதா? என்கிற கேள்வியை எழுப்புகிறது.
வலதுசாரி சித்தாந்த அரசியல் பேசிய பாஜகவுக்கு பல மாநிலங்களில் தோல்விதான் பதிலாக கிடைத்தது. அமித்ஷா, மோடியின் கைகளில் பாஜக சிக்கிய பின்னர் அக்கட்சியின் வியூகம் வேறானதாக மாறியது.
பாஜகவுக்கு ஆதரவே கிடைக்காது என திட்டவட்டமாக தெரியும் மாநிலங்களில் சித்தாந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கட்சிகளை வேட்டையாடும் போக்கை அமித்ஷா, மோடி அணி உருவாக்கியது.
செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு
காங். பலி
சித்தாந்தமே இல்லாத வாக்கு வங்கி அரசியல் கட்சியான காங்கிரஸ்தான் பாஜகவின் வேட்டைக்கு அதிகமாக பலியானது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை பேரம் பேசி வளைத்து போட்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது.
திரிபுராவில் பாஜக அதிரடி
ருசிகண்ட பூனை அடுத்தடுத்த மாநிலங்களிலும் இதே வேட்டையை தொடர செய்தது. இதன் உச்சகட்ட வெற்றியை இடதுசாரிகளின் கோட்டையான திரிபுராவில் பாஜக பெற்றது. அண்மையில் லோக்சபா தேர்தலில் சித்தாந்த எதிரிகளாக இருந்த இடதுசாரிகளையே தங்கள் பக்கம் இழுத்து மேற்கு வங்கத்தில் 'மகத்தான' சாதனை படைத்தது பாஜக.
அதிமுகவின் கதி
ஆனாலும் தென் மாநிலங்களில் பாஜகவின் வியூகம் அவ்வளவாக எடுபடாமல் இருந்தது. தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு குறிவைத்திருக்கிறது பாஜக. அதிமுகவை பொறுத்தவரையில் பாஜகவின் எடுப்பார் கைப்பிள்ளை என்கிற நிலையில் இருக்கிறது.
பாஜகவினராக மாறிய தெ.தேசம்
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் நிர்வாகிகளை கபளீகரம் செய்து வருகிறது பாஜக. இதே பாணியில்தான் கர்நாடகாவில் குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது அக்கட்சி.
|
கோவாவில் கட்சி தாவல்
தற்போது கோவாவிலும் கூண்டோடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்துள்ளது. அதிமுகவில் ராஜ்யசபா எம்.பிக்கள் 7 பேரை வளைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இந்த போக்கு தொடர்ந்தால் பாஜகவின் புதிய முழக்கமாக ஒரே தேசம்... ஒரே கட்சி என்கிற அபாயகரமான நிலை உருவாவதை தடுக்க முடியாது என்கின்றனர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.