‘எம்.எல்.ஏக்கள் ராஜினாமா’ நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக!
Recommended Video
பெங்களூரு: எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அரசை கவிழ்க்கும் நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து நல்லதோர் வெற்றியையும் பெற்றிருக்கிறது பாஜக.
சித்தாந்த அரசியல் பேசிய பாஜக, அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்பதை வடகிழக்கு மாநிலங்களில் அரங்கேற்றியது. அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கியது இந்த ஆடுபுலி ஆட்டம்.
முதலில் எம்.எல்.ஏக்களை கட்சித் தாவ வைத்து தமது பலத்தை அதிகரிப்பது; எதிர்க்கட்சியின் அரசை கவிழ்ப்பது இதுதான் பாஜக கடைபிடித்த யுக்தி. இது கைகொடுத்த உடன் அடுத்த உடன் சிறுசிறு கட்சிகளை வளைத்துப் போட முயற்சித்தது.
வடகிழக்கு கூட்டணி
இதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கான தனியே ஒரு கூட்டணியையும் உருவாக்கியது பாஜக. இதுவும் பாஜகவுக்கு கை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையே கபளீகரம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது.
திரிபுராவில் அதகளம்
திரிபுராவில் இந்த முயற்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இடதுசாரிகளின் கோட்டையில் காவி கொடி பறந்தது. இதன்பிறகு மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளையே காவிகளாக்கி சாதித்தது பாஜக.
ராஜ்யசபா விளையாட்டு
அத்துடன் ராஜ்யசபாவில் பிற கட்சி எம்.பிக்களை கூண்டோடு ஐக்கியமாகச் செய்து தமது பலத்தை அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது எதிர்க்கட்சி அரசை கவிழ்க்க அந்த கட்சியின் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது கர்நாடகாவில்.
கவிழ்ந்தது குமாரசாமி அரசு
இதனால் கட்சித் தாவல், தகுதி நீக்கம் எந்த பிரச்சனையும் எழவில்லை. எளிதாக முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக பாஜக அரசு அமைய உள்ளது. கட்சித் தாவலை ஊருக்கு ஊரு தினுசு தினுசாக அரங்கேற்றி புதிய சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.