முன்னாள் கர்நாடக முதல்வரின் சர்ச்சை வீடியோ.. இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு
பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சதானந்த கவுடா. இவர் கடந்த 2011-2012 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்துள்ளார். அதேபோல 2014ஆம் ஆண்டு முதல் ரயில்வே தொடங்கி சட்டத்துறை என பல்வேறு அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் சதானந்த கவுடா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். கர்நாடக பாஜகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான 69 வயதாகும் சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ நேற்று மாலை இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது பொய்யான வீடியோ என மறுத்துள்ள சதானந்த கவுடா, தனக்கு இருக்கும் இமேஜை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இந்த போலி வீடியோவை திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும் இது குறித்து கர்நாடக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சதானந்த கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், "நலம் விரும்பிகளே, நான் இருப்பது போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்; இந்த வீடியோ எனது இமேஜை டேமெஜ் செய்ய எனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளேன். தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்வதும், மற்றவர்களுக்கு அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளனர்.
அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்க்க முடியாத சிலர், இது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட சதானந்த கவுடா, இது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும் இது மிகவும் வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.