கெம்பே கவுடாவுக்கு ரூ. 500 கோடியில் 101 அடி உயர சிலை... ஒக்கலிகாக்களிடம் பலிக்குமா பாஜக ’பாச்சா’?
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து உக்கிரத்துடன் இருக்கிறது ஒக்கலிகா சமூகம். இச்சமூகத்தை சமாதானப்படுத்த பெங்களூரை நிறுவிய கெம்பே கவுடாவுக்கு ரூ500 கோடி மதிப்பில் 101 அடி உயர சிலையை அமைக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான லிங்காயத்துகள் பாஜகவின் வாக்கு வங்கிகளாக உள்ளனர். மற்றொரு சமூகமான ஒக்கலிகா சமூகத்தினர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கிகளாக இருந்து வருகின்றனர்.
இந்த வாக்கு வங்கியையும் தங்களது பக்கம் மடைமாற்ற பாஜக பகீரத முயற்சிகளை எடுத்தது. ஆனால் அது கை கொடுக்கவில்லை. இந்நிலையில் குமாரசாமி அரசை கவிழ்த்தது ஒக்கலிகா சமூகத்தை பெரும் கோபம் கொள்ள வைத்தது.
ஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்கவில்லை.. பாஜக அரசுதான் பயந்துடுச்சு.. உதயநிதி ஸ்டாலின்
சித்தார்த்தா தற்கொலை
அதைக்கூட அரசியல் நிகழ்வாக ஒக்கலிகா சமூகம் கருதியது. அதன்பின்னர் ஒக்கலிகா சமூகத்தின் 'காஃபி டே' சித்தார்த்தாவின் தற்கொலைதான் அச்சமூகத்தை பெருங் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. ஒக்கலிகா சமூக இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்தவர் சித்தார்த்தா.
சித்தார்த்தாவை சாகடித்தீர்களே ஏன்?
அவரை மத்திய அரசின் ஏஜென்சிகள் நெருக்கடி கொடுத்து தற்கொலை செய்ய வைத்ததை ஒக்கலிகா சமூகத்தால் ஏற்க முடியவில்லை. குமாரசாமி அரசை கவிழ்த்தீர்கள்.. அதுசரி.. ஏன் சித்தார்த்தாவை சாகடித்தீர்கள்? என்பதுதான் ஒக்கலிகா சங்கத்தின் முதன்மையான கேள்வி.
பாஜகவுக்கு எதிரான பிரகடனம்
இதன்பின்னர் குமாரசாமி அரசை பாதுகாக்க கடைசிநிமிடம் வரை போராடிப் பார்த்த சிவகுமாரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது பாஜக. இது ஒக்கலிகா சமூகத்தை வெகுண்டெழ வைத்தது. இதன்பின்னர்தான் பாஜகவுக்கு எதிரான போர் பிரகடனத்தை ஒக்கலிகா சமூகம் வெளிப்படுத்தியது. செப்டம்பர் 11-ந் தேதி பெங்களூரு நகரையே ஸ்தம்பிக்க வைத்த பிரமாண்ட பேரணியை ஒக்கலிகா சமூகம் நடத்திக் காட்டியது.
கெம்பே கவுடா சிலை
ஒக்கலிகா சமூகத்தின் இந்த விஸ்வரூபத்தால் பாஜக ரொம்பவே ஆடித்தான் போயிருக்கிறதாம். தற்போது இதனை சரிகட்டும் வகையில்தான் பெங்களூரை நிர்மாணித்த ஒக்கலிகா சமூகத்தின் போற்றுதலுக்குரிய அடையாளங்களில் ஒருவரான கெம்பே கவுடாவுக்கு 101 அடி உயர சிலையை ரூ500 கோடியில் நிறுவப் போவதாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த அறிவிப்பு எல்லாம் ஒக்கலிகா சமூகத்தினரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்திவிடுமா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறதாம்.