கர்நாடகா இடைத்தேர்தல்: 8 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் பாஜக- எக்ஸிட் போல் முடிவுகள்
பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையைப் பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வாக்குப் பதிவு குறைவாக இருந்தது.
ஹொஸ்கோடே தொகுதியில் மிக அதிகபட்சமாக 90.44% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஒட்டுமொத்தமாக 66.24% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பாஜகவுக்கு 8 முதல் 12 இடங்கள்
இதனையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை பாஜக 8 முதல் 12 தொகுதிகளைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளன.
ஜேடிஎஸ்-க்கு 1 கிடைக்கலாம்
காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 6 இடங்கள் கிடைக்கும் என்கின்றன. ஜேடிஎஸ் கட்சிக்கு 1 தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
பெரும்பான்மைக்கு தேவை
கர்நாடகா சட்டசபையில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. தற்போது பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
பாஜகவுக்கு எளிதாக பெரும்பான்மை
இந்நிலையில் இடைத்தேர்தல்களில் பாஜக 8 இடங்களில் வென்றால் பெரும்பான்மை பலத்தை எளிதாக பெற்றுவிடும். காங்கிரஸ் கட்சிக்கு 65; ஜேடிஎஸ்-க்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.