கர்நாடக அரசியல் கலாட்டா.. குமாரசாமிக்கு எதிராக ஓப்பனாகவே களமிறங்குகிறது பாஜக.. எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி, ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜக சார்பில் பெங்களூரில் நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களும் என, மொத்தம் 14 பேர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், பெரும்பான்மையின்றி ஆட்சி தொடர்வதாக குற்றஞ்சாட்டி இந்த தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தலைமைச் செயலகமான விதான சௌதாவுக்கு பின்புறம் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே, இந்த போராட்டம் நடைபெறும் என்று எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடக அரசியல் கலாட்டா பின்னணியில் பாஜக இல்லை என்று, பாஜக தலைமை தெரிவித்து வரும் நிலையில், இப்போது ஓப்பனாகவே, முதல்வருக்கு எதிராக களமிறங்க முடிவு செய்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான அசோக் நேற்று அளித்த பேட்டியின் போது, இத்தனை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த பிறகும் மானம் மரியாதை இருந்தால் குமாரசாமி இந்த நேரத்துக்கு முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கிண்டல் செய்திருந்தார்.
அதை நேரம் எம்எல்ஏக்களின் ராஜினாமா, சபாநாயகரால் இன்னும் ஏற்படவில்லை என்பதால் அம்மாநில அரசு நீடித்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சபாநாயகருக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் விதத்தில், பாஜக இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக முன்னாள் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜகவின் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்று, இன்று சபாநாயகரை சந்திப்பதற்கு வருகை தந்தது. ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாக, சபாநாயகர் தனது அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.