வறட்சியை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வரும் பாஜக.. கர்நாடக அமைச்சர் பாட்டீல் சரமாரி தாக்கு
பெங்களூரு: கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் குறை கேட்பு முகாம் என்பது, மக்கள் முன் போடப்படும் நாடகம் என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில், பாஜக சார்பாக குறை கேட்பு முகாம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் எடியூரப்பா உட்பட பல தலைவர்கள், வறட்சி பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வீசப்போகிறது புயல்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. பலத்த மழைக்கு வாய்ப்பு!
ஆய்விற்கு பின் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் குறை கேட்பு முகாம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மாநிலம் முழுவதுமே கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் வறட்சி நிவாரணப் பணிகளை செயல்படுத்துவதில் மாநில அரசு தோல்வியடைந்து விட்டதாக சாடினார்.
வறட்சியை சமாளிப்பதில் மட்டுமல்ல, முக்கிய அணைகளை பராமரிப்பதிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் கர்நாடகத்தில் தற்போதுள்ள கூட்டணி ஆட்சியை பாஜக ஒருபோதும் கவிழ்க்க நினைக்கவில்லை. தற்போது ஆட்சியை தக்க வைக்கவே கர்நாடக அமைச்சரவை விரிாக்கம் செய்யப்படுகிறது. ஆனாலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப் போட்டியால் இந்த ஆட்சி தானாகவே விரைவில் கவிழும் என்றார்.
எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மாநில உள்துறை அமைச்சருமான எம்.பி.பாட்டீல் ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்துவதில் பாஜக தோல்வியடைந்து விட்டது. அவர்களின் முயற்சி பலிக்காமல் போய்விட்டதால் தான் கூட்டணி அரசு தானாகவே கவிழும் என கூறி வருகின்றனர் என்றார்.
கர்நாடகத்தில் வெகு விரைவில் பருவ மழை துவங்க உள்ளது. இந்த சூழலில் மாநிலத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் குறைகேட்பு கூட்டம் நடத்துவது என்பது, பாஜக-வின் நாடகத்தனத்தையே வெளிகாட்டுவதாக அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.
விரைவில் மழை பெய்ய உள்ள நிலையில், வறட்சி பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடியூரப்பா, இத்தனை நாட்கள் எங்கு சென்றார் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. மக்கள் மீது இவ்வளவு நாளாக பாஜக-வினருக்கு இல்லாத அக்கறை, தற்போது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை என கிண்டல் செய்தார்.
வறட்சியை போக்க மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால் பாஜக-வினர் மாநில அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மாநிலத்தில் நிலவும் வறட்சியை வைத்து அரசியல் நாடகம் ஆடி வருகின்றனர் என்றும் மாநில உள்துறை அமைச்சர் பாட்டீல் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.