தென் கர்நாடகாவில் தேவகவுடா கட்சிக்கு 'பாலூற்றும்' பாஜக!
பெங்களூர்: கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக தென் கர்நாடகாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பாலூற்ற பாஜக முடிவு செய்துவிட்டது.
நாட்டிலேயே குஜராத்தின், அமுல் நிறுவனத்திற்கு பிறகு மிகப்பெரிய பால் கூட்டுறவு சங்கம் கர்நாடகா பால் கூட்டமைப்பு (KMF). நந்தினி என்ற பெயரில் பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள், இனிப்பு வகைகளை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.
இந்த கூட்டமைப்பில் கடந்த 35 வருடங்களில் 19 முறை ஜனதா பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தான் தலைவராக இருந்துள்ளார். இதில் 1984ஆம் ஆண்டு சித்தராமையா தலைவராக பதவி வகித்ததும் உள்பட்டதாகும்.
அப்பா பேசலையே.. கண் கலங்கிய மகள்.. "குமரி"யாரையே மிஞ்சிய "குமாரி" விஸ்வரூபம் எடுத்த கதை!
ஒருமனதாக தேர்வு
இம்முறை காட்சிகள் மாறியுள்ளன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பால் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ பாலச்சந்திர ஜார்கிகோலி ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம். ஆனால், தென் கர்நாடகாவில் இது மிக மிக முக்கியமான விஷயம். அரசியல் ரீதியாக அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம்.
தேவகவுடா மகன்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டனர். உதாரணத்திற்கு 8 மாவட்டங்களைச் சேர்ந்த பால் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளை, தங்கள் பக்கம் இழுப்பதில், பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து தோல்வி உறுதி என்பதை அறிந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த தேவ கவுடாவின் மகன் ரேவண்ணா போட்டியில் இருந்து விலகி விட்டார்.
பாஜக பலம்
எனவே, போட்டியின்றி ஒருமனதாக பாஜக வேட்பாளர், பால் கூட்டுறவு அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் கர்நாடகாவில் தான் அதற்கு வாக்கு வங்கி இருக்கிறது. பாஜக அதிகமாக செல்வாக்குடன் இருப்பது வட கர்நாடகாவில். காங்கிரசுக்கு மாநிலம் தழுவிய அளவில் பரவலாக செல்வாக்கு உள்ளது.
பசும்பால்
தெற்கு கர்நாடகாவில்தான், பசும் பால் உற்பத்தியாளர்கள் அதிகமாக உள்ளனர். வடக்கு கர்நாடகாவில் எருமைப்பால் உற்பத்தியாளர்கள் கணிசமாக உள்ளனர். கூட்டுறவு அமைப்பின் தலைவராக எந்த கட்சியை சேர்ந்தவர் உள்ளாரோ அந்த கட்சி பசும்பால் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தியாளர்கள் மத்தியில் விரைவாக வளர்ச்சி பெறுகிறது என்பது கடந்த கால வரலாறு.
பாஜக ஆட்சி
இதற்கு முன்பு பாஜக சேர்ந்த சோமசேகர ரெட்டி என்பவர் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பால் கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்தார். அப்போது தெற்கு கர்நாடகாவில் கணிசமாக பாஜக வளர்ச்சி பெற முடிந்தது. அதுவும் எடியூரப்பா மாநிலத்தில் முதல்வராக இருந்த காலகட்டம். இப்போதும் எடியூரப்பா முதல்வராக இருக்கும் நிலையில், ஆட்சியில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது தான் பால் உற்பத்தியாளர்களுக்கு நல்லது என்பதால் பாஜகவுக்கு ஒரு வாக்கு வங்கி உருவாகும்.
வலுவாக வேரூன்றலாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது மற்றும் பால் உற்பத்தியாளர்கள் இடையே சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்து ஆளுங்கட்சி நல்ல பெயரையும் ஈட்ட முடியும். தெற்கு கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதாதளம் வலுவாக உள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு வலுவாக வேரூன்ற பாஜக முயற்சி செய்கிறது.