சத்தீஸ்கரைத் தொடர்ந்து.. கர்நாடகாவில் சுற்றித் திரியும் கருஞ்சிறுத்தை.. புகைப்படம் வைரல்!!
பெங்களூர்: இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், கருஞ்சிறுத்தை கர்நாடகா மாநிலத்தின் வனப்பகுதிகளில் சுற்றித் திரிவது, ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கபினி வனப்பகுதியில் இந்த கருஞ்சிறுத்தை சுற்றித் திரிவதை புகைப்படக்காரர் ஷாஸ் ஜங் படம் பிடித்துள்ளார். இந்தப் புகைப்படம் இயர்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கபினி வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை சுற்றித் திரிகிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ''இந்த கருஞ்சிறுத்தை அங்கு இருக்கும் மரங்களில் சுற்றித் திரிகிறது. நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா'' என்று பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தப் பதிவை 55.8K பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 240.6K பேர் லைக் செய்துள்ளனர். இந்த சிறுத்தையை பலரும் பாகீராவில் வரும் சிறுத்தையுடன் இதை ஒப்பிட்டு கமென்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
''இயற்கையின் அழகைப் பாருங்கள். ஒவ்வொருவரும் இந்த இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும்'' என்று ஒரு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் கருஞ்சிறுத்தை:
இதற்கு முன்னதாக சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் இருக்கும் அச்சானக்மார் புலிகள் சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று கண்டறியப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற கருஞ்சிறுத்தை அதே வனச்சரகத்தில் காணப்பட்டது. மீண்டும் கடந்த மே மாதம் அதே வனத்தில் ஒரு கருஞ்சிறுத்தை கண்டறியப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றா அல்லது வேறா என்பது உறுதிப்படுத்தவில்லை. ஆனால், எந்த இடத்தில் இந்த சிறுத்தை சுற்றித் திரிகிறது என்பது குறித்த தகவலை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட வனத்துறையினர் மறுத்துவிட்டனர்.
மலைகிராமங்களுக்கு 7 கி.மீ. நடக்கும் திமுக எம்.எல்.ஏ... நெகிழும் மலைவாழ் மக்கள்