பெங்களூர் டூ தமிழகம் செல்லும் பஸ்கள் புறப்படுமே.. சாந்திநகர் பஸ் நிலையம்.. அடமானம் வச்சாச்சாம்
பெங்களூர்: வருவாய் இழப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் (BMTC) நகரில் உள்ள முக்கியமான பேருந்து நிலையமான சாந்திநகர் பேருந்து நிலையத்தை (shantinagar bus stand) கனரா வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளது அம்பலமாகி உள்ளது.
பெங்களூர் நகரின் மையப் பகுதியில் சாந்திநகர் என்ற பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையத்தை கனரா வங்கியிடம் பிஎம்டிசி நிர்வாகம் அடமானம் வைத்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஆனந்த் என்பவர் இந்த தகவலை பெற்று அம்பலப்படுத்தியுள்ளார்.
ரூ.160 கோடி
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ.160 கோடியை வங்கியிடமிருந்து பிஎம்டிசி இவ்வாறு பெற்றுள்ளது. இதற்காக இதுவரை ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.
7 ஏக்கர் பரப்பளவு கட்டிடம்
7 ஏக்கர் பரப்பளவிலான இந்த பஸ் நிலைய கட்டடத்தை, ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின்கீழ், ரூ.108 கோடி செலவில், மத்திய அரசு, 2010ம் ஆண்டு கட்டிக் கொடுத்தது. தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் புறப்படுகின்றன. இதன் அருகே தமிழக பஸ்களுக்கான டெப்போவும் அமைந்துள்ளது. ஆனால் அது பேருந்து நிலைய கட்டிட வரம்புக்குள் வராது.
தமிழக பேருந்துகள் புறப்படும் இடம்
சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெங்களூர் நகரில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயங்கும். அதே நேரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பெங்களூரிலிருந்து குறுகிய தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், மைசூர் சாலையில் உள்ள சாட்டிலைட் டவுன் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
பிஎம்டிசி நடவடிக்கைகள்
இப்போது அடமானம் வைக்கப்பட்டுள்ள சாந்தி நகர் பேருந்து நிலையம் லால்பாக் பூங்காவுக்கு அருகே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிஎம்டிசி நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை குறைத்து கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் பொது போக்குவரத்தை அதிக மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால், பிஎம்டிசி நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.