கருணாநிதியின் 18 வருட சபதத்தை நிறைவேற்றியவர்.. கர்நாடக தமிழர்களின் நண்பர்.. எடியூரப்பாவின் மறுபக்கம்
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 18 வருட கால சபதத்தை நிறைவேற்ற உதவியவர் பாஜக தலைவர் எடியூரப்பா என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. கருணாநிதியே தனது வாயால் கூறிய தகவல் அது.
தமிழர்கள் கணிசமாக வாழக்கூடிய பிற மாநில நகரங்களில் முக்கியமானது பெங்களூர். இதனாலேயே தொடர்ந்து கன்னடர்களின் கோபத்திற்கு ஆளாகி வரும் இனமும் தமிழினம். போதாத குறைக்கு காவிரி பங்கீடு விவாதங்கள் எழும்போதெல்லாம், தமிழர்களை ஏதோ பரம எதிரிகள் போலத்தான் கன்னட அமைப்பினர் பார்ப்பார்கள்.
இப்படியான சூழ்நிலையில்தான், பெங்களூர் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க முடிவு செய்து, மாநகராட்சியின் அனுமதியுடன், 1991ம் ஆண்டு, அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலையை அமைத்தது.
நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா.. பாஜகவை தனி நபராக தோளில் சுமந்தவர்
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலையை அப்போதைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு, அவர்கள் தொடுத்த வழக்கால், திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் சாக்குப்பையால் மூடப்பட்டு இருந்தது. உலக பொதுமறை கொடுத்த வள்ளுவன் சிலை பெங்களூர் வீதியில் சாக்குப்பையில் கட்டப்பட்டு இருப்பது தமிழர்களின் தன்மான உணர்ச்சியை சீண்டியபடியே இருந்தது.
தமிழர்களுடன் உறவு
ஆனால், திருவள்ளுவருக்கு சாக்குப்பையிலிருந்து விடுதலை கிடைத்தது, 2009ல் எடியூரப்பா முதல்வராக இருந்தபோதுதான். ஆட்சிக்கு வரும் முன்பாக இருந்தே, தனது சொந்த மாவட்டமான ஷிமோகாவிலுள்ள தமிழர்களுடன் எடியூரப்பாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எடியூரப்பாவும் சரி, சக மாவட்டத்துக்காரரும், முன்னாள் பாஜக தலைவருமான ஈஸ்வரப்பாவும் சரி, ஷிமோகா மாவட்ட தமிழ்ச் சங்கத்துக்கு நிறைய நிதி உதவிகளை செய்து வந்தவர்கள்தான். இப்படி ஒரு உறவை கொண்டிருந்த எடியூரப்பா, திருவள்ளுவர் சிலையை திறக்க முடிவு செய்தார்.
சென்னையில் சர்வக்ஞர் சிலை
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்தார் எடியூரப்பா. அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். அந்த விழாவில் பேசிய எடியூரப்பா, கருணாநிதியை தனது அண்ணன் என அழைத்தார். கருணாநிதியும், எடியூரப்பாவை தம்பி என்று அழைத்தார். நல்லெண்ண அடிப்படையில் சென்னை, அயனாவரத்தில், கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையும் அடுத்த சில நாட்களில் திறந்து வைக்கப்பட்டது.
18 வருட சபதம்
கன்னட அமைப்புகளின் போராட்ட அறிவிப்பு, கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், திருவள்ளுவர் சிலை திறப்பை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் எடியூரப்பா. சாலையில் தமிழ் பேசி சென்றாலே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெங்களூரில், தமிழின் பெரும் புலவர் சிலை கம்பீரமாக காட்சியளிக்க வகை செய்தவர்தான் எடியூரப்பா. சிலை திறப்பு விழாவில் பேசிய கருணாநிதி, திருவள்ளுவர் சிலை திறக்கப்படும்வரை, பெங்களூரில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இப்போது எனது எண்ணம் நிறைவேறிவிட்டது என்றார். அந்த வகையில் கருணாநிதியின் 18 வருட கால சபதத்தை, நிறைவேற்றி வைத்தவர்தான் எடியூரப்பா. பங்காரப்பா ஆட்சி காலத்தில், தமிழர்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட வடுவை, எடியூரப்பாதான் மருந்து போட்டு ஆற்றினார் என்கிறார்கள் கர்நாடக வாழ் தமிழர்கள்.
தமிழர் நலன்
இப்போது மீண்டும் எடியூரப்பா முதல்வராகப்போகிறார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கலாம், பின் வழியாக ஆட்சியை பிடிப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கலாம், அதெற்கெல்லாம் அவர் தரப்பில் ஒவ்வொரு வகை மறுப்புகள் சொல்லப்படலாம். நமக்கு அதெல்லாம் தேவையில்லை. அது கர்நாடக அரசியல் பிரச்சினை. ஆனால், கர்நாடக தமிழர்களுக்கு அவர் பாதுகாப்பு அரண் என்பதுதான், வரலாறு சொல்லும் பாடம்.