அமைச்சர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட எடியூரப்பா!
பெங்களூர்: கர்நாடக சட்டத்துறை அமைச்சரின் ஒரு செயலுக்கு, முதல்வர் எடியூரப்பாவே மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து குருபர் ஜாதியினரின் எதிர்ப்பு குரல் சற்று குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், ஹுலியார் பகுதியில் கனகதாசர் பெயரில் ஒரு சாலை சந்திப்பு இருந்தது. 13 வருடங்களாக இதே பெயரில்தான் இந்த பகுதி அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில், இந்த பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மறைந்த, கனகதாசர் மிகப்பெரிய பக்தி கவிஞராகும். இவரது பிறந்த நாளை கர்நாடக அரசு, விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இவர் குருபர் எனப்படும் ஜாதியை சேர்ந்தவராக கருதப்படுகிறார். கர்நாடகாவில், லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள், தலித்துகள் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா சார்ந்த குருபர் ஜாதியினர்தான் அதிகமாக உள்ளனர்.
100 ரவுடிகள் நேரில் ஆஜர்.. வாலை சுருட்ட வேண்டும்.. வார்னிங் செய்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்
இந்த நிலையில், இத்தொகுதி எம்எல்ஏவும், சட்டத்துறை அமைச்சருமான மாதுசாமிதான், இந்த பெயர் நீக்கத்திற்கு காரணம் என குருபர் சமூகத்தினர் கொந்தளித்தனர். 15 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது ஆளும் பாஜகவுக்கு தலைவலியாக மாறியது.
முதல்வர் எடியூரப்பாவே கேட்டுக்கொண்டும், மாதுசாமி, இந்த விஷயத்தில் வருத்தம் கூட தெரிவிக்க முடியாது என தெரிவித்துவிட்டார். இதனிடையே பெங்களூல் இன்று நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, அமைச்சர் மாதுசாமி, குருபர்கள் மனம் புண்படும்படி ஏதாவது கருத்து கூறியிருந்தாலோ, நடந்திருந்தாலோ, நானே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கனகதாசர் குறித்து எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த முறை நான் முதல்வராக இருந்தபோதுதான், கனகதாசர் பெயரில், வளர்ச்சி வாரியம் அமைத்தேன்.
எனவே, இதுகுறித்து இனிமேல் யாரும் பேச வேண்டாம். அனைத்து சமூக மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதுதான் கனகதாசரின் கனவும் கூட. இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார். முன்னதாக மாதுசாமியை அமைச்சரவையிலிருந்து நீக்க வலியுறுத்தி, கர்நாடக சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.