பாஜக தலைவர்களுக்கு லஞ்சம்.. காங். குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு.. முடிந்து போனது என்கிறார்
Recommended Video
பெங்களூர்: தன்மீது காங்கிரஸ் கட்சியால் சுமத்தப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டை கர்நாடக முன்னாள் முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மறுத்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுக்கு சுமார் ரூ.1800 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக காங்கிரஸ் கட்சி இன்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இந்த பகீர் தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து எடியூரப்பா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி திவாலாகி விட்டது. பொதுவெளியில் விவாதிப்பதற்காக அவர்களிடம் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் கிடையாது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவிற்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி மிகவும் விரக்தி அடைந்து உள்ளது.
ஷாக்.. அத்வானிக்கு ரூ.50 கோடி, ஜெட்லிக்கு ரூ.150 கோடி! பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா கொடுத்த லஞ்சம்?
2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தாங்கள் தோற்கடிக்கப்படுவோம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே நன்கு உணர்ந்து விட்டனர்.
போட்டி ஆரம்பிக்கும் முன்பாகவே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டது.
பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக இன்று காங்கிரஸ் கட்சியால் எழுப்பப்பட்ட இந்த புகார் உட்பட, பல்வேறு புகார்கள் ஏற்கனவே தீவிரமாக விசாரிக்கப்பட்டு, அந்த ஆவணங்கள் போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, எனது கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பதை தெளிவு படுத்தி விட்டனர்.
ஊடகம் மூலமாக ஒரு மட்டரகமான கதையை உற்பத்தி செய்து, தேர்தல் நேரத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் துடிக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுகள், எந்தவித அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் பொய்யானவை. இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே முடிந்து போன விஷயங்கள். இவ்வாறு பி.எஸ். எடியூரப்பா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.