கடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்
Recommended Video
பெங்களூர்: முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா செவ்வாய்க்கிழமையான இன்று தனது அமைச்சரவையை முதல் முறையாக விரிவாக்கம் செய்தார். ஆனால், திங்கள்கிழமை இரவு தாமதமாகத்தான், எடியூரப்பாவுக்கே தனது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற தகவல் கைக்கு கிடைத்துள்ளது.
அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் வழங்குவது என்பதில், பாஜக தலைமை முழு முடிவையும் எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், எடியூரப்பா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்றுவந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதையடுத்து ஜூலை 26ஆம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
எடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு
தாமதம்
ஆனால் இதுவரை, அமைச்சரவையில் எடியூரப்பா தவிர வேறு யாருக்குமே இடம் வழங்கப்படவில்லை. அமைச்சர் பதவிக்கான போட்டி அதிகமாக இருந்ததால், எடியூரப்பாவுக்கு தலை சுற்றிவிட்டது. இதனால்தான் கேபினெட் விரிவாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யுங்கள் என்று, பாஜக தலைவர் அமித்ஷா, க்ரீன் சிக்னல் கொடுத்தார்.
ஆலோசனை பெற்ற அமித்ஷா
இருப்பினும், முதல்வர் பதவியில் உள்ள எடியூரப்பாவுக்கு கடைசிவரை, அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற தகவல் வரவில்லையாம்.
அமைச்சர்கள் யார் யார், அவர்களின் இலாகாக்களின் பட்டியலை கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, கட்சி செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளார்.
தாமதம்
நேற்று இரவு வரை கூட, அமைச்சர்களின் பட்டியல் பெங்களூரை வந்து அடையவில்லை. இன்று காலைதான் பட்டியல் எடியூரப்பா கைக்கு வந்துள்ளது. ஜாதி மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தின் படி வழக்கமாக கர்நாடகாவில் அமைச்சரவை அமைக்கப்படும். ஆனால் பாஜக மேலிட கட்டளைப்படி தற்போது அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
17 அமைச்சர்கள்
மேலிடம் வழங்கிய பட்டியல்படி, ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோகா, கோவிந்த் கார்ஜோல், அஸ்வத் நாராயண், லக்ஷ்மன் சவதி, , பி.ஸ்ரீராமுலு, எஸ்.சுரேஷ்குமார், வி.சோமண்ணா, சி.டி. ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா சீனிவாஸ் பூஜாரி, ஜே.சி. மாது சாமி, சி.சி. பாட்டீல், எச்.நாகேஷ், பிரபு சவுகான், சஷிகலா ஜொல்லே அன்னசாகேப் ஆகிய 17 பேர் இன்று காலை ராஜ்பவனில் பதவியேற்றனர். தனக்கு நெருக்கமானவர்களை அமைச்சரவையில் சேர்க்க முடியவில்லை எடியூரப்பாவால். எடியூரப்பாவுக்கு வலதுகரமாக விளங்கிய பாலச்சந்திர ஜாரகிகோளி, ரேணுகாச்சாரியா, முருகேஷ் நிராணி, யோகேஷ்வர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் இன்று அமைச்சரவை விஸ்தரிப்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. இது எடியூரப்பாவுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
எடியூரப்பா செல்வாக்கு
பாஜக என்ற கட்சிக்கு அல்லாமல், எடியூரப்பா என்ற தனிமனிதருக்கு கர்நாடகாவில் கணிசமான செல்வாக்கு உள்ளது. கடந்த முறை பாஜக தலைமையுடன் உரசல் ஏற்பட்டபோது கர்நாடகா ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி இருந்தார் எடியூரப்பா. கட்சி துவங்கிய ஓராண்டிற்குள் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தலின்போது, அந்த கட்சி சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றது. ஆறு தொகுதிகளையும் கைப்பற்றியது. ஓட்டுக்களை பிரித்தது எடியூரப்பா கட்சி. எனவே, வெறும் 20 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக 40 தொகுதிகளை மட்டுமே வென்றது. இப்படி தனிப் பெரும் செல்வாக்கு கொண்ட எடியூரப்பாவின் செல்வாக்கை, பாஜக மேலிடம் கட்டுப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைதான் இது என்று கூறப்படுகிறது.