கருணாநிதி vs ஜெயலலிதா பாணி மோதல்.. பதவியேற்கும் முன்பே குமாரசாமிக்கு ஷாக் கொடுத்த எடியூரப்பா உத்தரவு
Recommended Video
பெங்களூர்: தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நடுவே இருந்த அரசியல் போட்டி, போல, கர்நாடகாவில் குமாரசாமி மற்றும் எடியூரப்பா இடையேயும் அரசியல் உரசல் இருப்பது மீண்டும் ஒரு முறை இன்று வெளிப்படையாக தெரிந்து விட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்து மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.
தற்போது குமாரசாமி காபந்து முதல்வராக இருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் பாஜகவின் எடியூரப்பா.
ஜனநாயகத்திற்கு எதிரானது.. எடியூரப்பா பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் காங்., மஜத தலைவர்கள்
தலைமைச் செயலாளர்
இன்று மாலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்கிறார். ஆனால், பதவியேற்கும் முன்பாகவே, தலைமைச் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கரை தனது இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார் எடியூரப்பா. அப்போது குமாரசாமி அரசு ஜூலை மாதத்தில் பிறப்பித்த எந்த ஒரு உத்தரவையும் செயல்படுத்தக் கூடாது என்று கட்டளை பிறப்பித்துள்ளார், எடியூரப்பா.
|
சுற்றறிக்கை
இதையடுத்து, அனைத்து துறை செயலாளர்களுக்கும், விஜயபாஸ்கர் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில், ஜூலை மாதத்தில் தற்போதைய காபந்து முதல்வரால் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல உத்தரவுகள்
ஆட்சிக்கு, பெரும்பான்மை இல்லை என்பதை குமாரசாமி தெரிந்துகொண்டு, கடைசி நேரத்தில் அவசர அவசரமாக பல உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், இதில் பல கோடி மதிப்புக்கு ஊழல்கள் நடைபெற்றதாகவும், பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்கும் போது அதிரடியாக எடியூரப்பா இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழகம்
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பிரேக் போடப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது கர்நாடகாவிலும் அதே கலாச்சாரம் உருவாகியுள்ளது என்று ஐயப்பாடு எழுந்துள்ளது.