நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா.. பாஜகவை தனி நபராக தோளில் சுமந்தவர்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் எடியூரப்பா. இதற்கு அவர் உழைத்த உழைப்பு, பட்ட கஷ்டங்கள் லேசுப்பட்டது இல்லை.
கர்நாடகாவில், பூஜ்யமாக இருந்த, பாஜகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு கொண்டு வந்தவர் எடியூரப்பா.
விவசாயிகள் பிரச்சினைக்கான போராட்டங்களை முன்னெடுத்து மாநிலம் முழுக்க மக்கள் ஆதரவைப் பெற்றவர். எதிர்க்கட்சி தலைவராக எடியூரப்பா பதவி வகித்த காலங்களில், அவர் பேசத் தொடங்கினால், சட்டசபையே நடுநடுங்கும் என்ற பெயர் அங்கு உண்டு.
குமாரசாமி மட்டுமல்ல.. எடியூரப்பாவும் முதல்வர் பதவியில் முழுமையாக நீடித்தது இல்லையே!
துணை முதல்வர்
நீண்ட காலமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த எடியூரப்பாவுக்கு முதல் முறையாக ஆளும் கட்சி வரிசையில் அமர இடம் கிடைத்தது, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உடனான கூட்டணி ஆட்சியின் போது தான். காங்கிரஸ் உடனான கூட்டணி முறித்துக்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வரானார். அப்போது எடியூரப்பா துணை முதல்வராகப் பொறுப்பு வகித்தார்.
முதல் முறை முதல்வர்
ஆனால், 2007ம் ஆண்டு, ஒப்பந்தப்படி 20 மாதங்கள் கழித்த பிறகு முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுத்தரவில்லை குமாரசாமி. முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்ற போதிலும், வெறும் ஏழு நாட்கள் மட்டுமே அவர் அந்தப் பதவியை அலங்கரிக்க முடிந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ரெட்டி சகோதரர்கள்
இதையடுத்து பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனால் அப்போதும் முழு பெரும்பான்மையை பெற முடியவில்லை. சுயேச்சைகள் ஆதரவுடன், முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை எடியூரப்பா முதல்வராக பதவி வகித்த நிலையில், ரெட்டி சகோதரர்கள் சில எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு எடியூரப்பா ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ததால், முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டியதாயிற்று. இதன்பிறகு ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலும் அடைக்கப்பட்டார். பாஜக ஆட்சி காலத்தில் எடியூரப்பாவுக்கு பிறகு சதானந்த கவுடா அதன் பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் முதல்வராக பதவி வகிக்க வேண்டிய நிலை உருவானது.
தனிக்கட்சி
குற்றம் செய்யாமல் சிறையில் அடைத்தனர் என கோபித்துக் கொண்ட எடியூரப்பா, 2012ஆம் ஆண்டு, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியை தொடங்கினார். ஆனால் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பாஜகவில் மீண்டும் இணைந்தார். ஷிமோகா தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்காவது முறை முதல்வர்
2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபை பொதுத் தேர்தலில், 105 தொகுதிகளை வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்பிக்கள் எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், எவ்வளவு முயன்றும் ஆதரவை பெற முடியாத நிலையில் ஒரு வாரம் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பாகவே ராஜினாமா செய்து வெளியேறினார். தற்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் 76 வயது எடியூரப்பா.