எத்தனை நாள் தாங்கும் எடியூரப்பா ஆட்சி? காங்கிரஸ் அரசை கலைத்த அதே ஆயுதம் இப்போது பாஜகவுக்கு எதிராக!
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு அமைக்க, எடியூரப்பாதான் முயற்சி செய்வார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, கட்சித் தலைமையுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இப்போதைக்கு, எடியூரப்பாவுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்கள் உள்ளன, ஆனால் அவரது மிகப்பெரிய சவால் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பதுதான்.
அமைச்சராக விரும்புவோர் பட்டியலில், 30 பேர் முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். இது தவிர 15 காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் மற்றும் 2 சுயேச்சைகள் உள்ளனர்.
சட்டசபை பலம்
உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவது பாஜகவின் திட்டமாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகின்றன. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாக்களைத் தொடர்ந்து, சட்டசபையின் பலம் குறைந்துவிட்டது. சட்டசபையில் தற்போது 209 உறுப்பினர்கள் உள்ளனர், மேஜிக் எண் 103 ஆகும். பாஜகவுக்கு 105 பேர் உள்ளனர், இது தவிர இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களான எச்.நாகேஷ் மற்றும் ஆர் சங்கர் ஆகியோரின் ஆதரவும் உள்ளது.
சபாநாயகர் முடிவு
அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் எவ்வாறு தக்க வைப்பது என்பதை தீர்மானிப்பதற்கு முன், சபாநாயகர் அவர்கள் மீது எந்த மாதிரிநடவடிக்கை எடுப்பார் என்பதை அறிய பாஜக காத்திருக்க வேண்டும். அதிருப்தியாளர்களின் தலைவிதி பெரும்பாலும் சபாநாயகரைப் பொறுத்தது. சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வாரா அல்லது அவர்களை தகுதி நீக்கம் செய்வாரா என்பது பெரிய கேள்வி. அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் அடுத்து அமையும் அரசில் அமைச்சர்களாக இடமளிக்கப்படலாம்.
அமைச்சர் பதவி
தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் அமைச்சர்களாக முடியாது, தற்போதைய சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவர்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடலாம். தகுதி நீக்கம் என்பது சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பதையும் சேர்த்தே குறிக்கும். எனவே மேலவை உறுப்பினராகி அமைச்சராகவும் முடியாது.
அதிருப்தி அஸ்திரம்
அமைச்சர் பதவி கேட்டுதான், காங்கிரசில் அதிருப்தியாளர்கள் கிளம்பினர். இப்போது பாஜகவுக்கும் அதே பிரச்சினை வந்துள்ளது. அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி தந்தால் பாஜகவிலுள்ள சீனியர்களுக்கு அமைச்சர் பதவி தர முடியாது. இங்கே கொடுத்தால், அங்கே பூசல் வெடிக்கும். எனவே எடியூரப்பா அரசு எத்தனை நாட்கள் தாங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சபாநாயகர் அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அதை காரணமாக சொல்லி, அமைச்சர் பதவி தராமல், எடியூரப்பா எஸ்கேப் ஆக முடியும். எனவே இப்போது சபாநாயகர் கையில்தான் எல்லாம் இருக்கிறது.