பெங்களூரில் பெருகிப் போன கொரோனா.. சாட்டையை கையில் எடுத்த எடியூரப்பா.. 'எஸ்ஓபி' கட்டாயம்
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா பாதிப்பு அளவு கடந்து போய்க் கொண்டிருப்பதால் விதிமுறைகளை வலுப்படுத்த முதல்வர் எடியூரப்பா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவல் துவக்க காலகட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி நோய் பரவலை கட்டுக்குள் வைத்திருந்தது பெங்களூர். இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த பல வாரங்களாக நாள் ஒன்றுக்கு, பெங்களூரில் குறைந்தபட்சம் 4500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பதிவாகி வருகிறார்கள்.
சில நாட்களில் இது சுமார் 5.5 ஆயிரம் வரை கூட உயர்ந்ததை பார்க்க முடிந்தது. இதனால் நகர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போலீசுக்கு அதிகாரம்
இந்த நிலையில்தான், அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை ஒன்றை நடத்தினார். அப்போது பெங்களூரில் உள்ள 8 மண்டலங்களிலும் விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இப்போது காவல்துறையினர் மாஸ்க் விஷயத்தில் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. இனி போலீஸ் துணையுடன் மாஸ்க் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடியூரப்பா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பண்டிகை காலம்
இது பண்டிகை காலம். எனவே மக்கள் ஷாப்பிங் செய்ய பெரிய அளவுக்கு வெளியே வருவார்கள். எனவே அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தடாலடியாக செயல்பட்டால்தான், கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.
நடவடிக்கை ஆரம்பம்
லாக்டவுன் தளர்வுக்கு பிறகு, பெங்களூரில் வர்த்தகம் வழக்கம்போல நடைபெறுகிறது. ஆனால் தேவையில்லாமல் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதுதான், கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை தவிர்க்கவும், தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முகக் கவசம் அணியாமல் நிற்பது போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் இப்போது களமிறங்கியுள்ளனர்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்பது.. எப்படியெல்லாம் பொது இடங்களில் மக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு வெளியிட்ட விதிமுறைகளாகும். இனிமேல் பெங்களூரில் அவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர். அதேநேரம் பிற மாநிலங்களிலிருந்து பெங்களூர் வருவோருக்கு எந்த தடையும் இல்லை.
பள்ளிகள் விடுமுறை
கர்நாடகாவிலுள்ள மாநில வழிக் கல்வி பள்ளிகளில், அக்டோபர் 30ம் தேதிவரை விடுமுறை வழங்க ஏற்கனவே எடியூரப்பா உத்தரவிட்டார். கொரோனா பரவலால், ஆன்லைன் கிளாஸ் கூட நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.