முதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு
Recommended Video
முதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது தொகுதியின் வளர்ச்சிக்காக நான் ரூ. 700 கோடி கேட்ட நிலையில் 1000 கோடி ரூபாய் கொடுத்தார் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ நாராயணா கௌடா தெரிவித்துள்ளார்.
17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் குமரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து 17 எம்எல்ஏக்களையும் கர்நாடகா சபாநாயகராக இருந்து ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அண்மையில் 17 தொகுதிக்கும் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புயலை கிளப்பிய எடியூரப்பா ஆடியோ- ஆட்சியை கலைக்க காங். வலியுறுத்தல்!
ஆதரவு ஏன்
இந்நிலையில் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜா பேட் எம்எல்ஏ நாராயண கௌடா எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்தும், 1000 கோடி ரூபாய் எடியூரப்பா தொகுதி வளர்ச்சிக்கு அளித்ததாகவும் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.
ஆதரவு கேட்டார்
இது தொடர்பாக நாராயண கௌடா ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், "ஒரு நாள் காலை 5 மணிக்கு சிலர் (குமாரசாமி ஆட்சி கவிழும் முன்பு) என்னை வீட்டில் வந்து சந்தித்தனர். அவர்கள் என்னை எடியூரப்பாவை சந்திக்குமாறு கூறினார்கள். இதன்பேரில் நான் எடியூரப்பா வீட்டுக்கு சென்றேன். அப்போது எடியூரப்பா வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். நான் உள்ளே வந்ததும், என்னை அமர சொன்னார். அப்படியே என்னிடம், தான் மீண்டும் முதல்வராக ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்.
1000 கோடி கொடுத்தார்
நான் அவரிடம் கிருஷ்ணராஜா பேட் தொகுதி வளர்ச்சிக்காக ஒரு 700 கோடி ரூபாய் கொடுங்கள் என்று கேட்டேன். அவர் 700 கோடி ரூபாய் என்ன, உங்களுக்கு கூடுதலாக 300 கோடி சேர்ந்து 1000 கோடி ரூபாயாக தருகிறேன் என்றார். சொன்னபடியே எடியூரப்பா அந்த தொகையை தந்தார். இப்படி ஒரு சிறந்த மனிதருக்கு நான் ஆதரவு தரக்கூடாது என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் அல்லவா? அப்படித்தான் நானும் நினைத்தேன். அதன்பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்" இவ்வாறு நாராயண் கௌடா கூறினார்.
தொகுதி வளர்ச்சி
தன்னைப்போலவே முன்னாள் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ ஒருவரும், முதல்வர் எடியூரப்பா தொகுதி வளர்ச்சி நிதி அளித்ததற்காக ஆதரவு அளித்தாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார் என நாராயண் கொளடா தெரிவித்தார்.