கர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன?
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி என்பது, அரசியலில் பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்று.. இந்த மாநிலத்தில் சக்திமிக்க தலைவர் அமித்ஷாவோ, அல்லது நரேந்திர மோடியோ கிடையாது, எடியூரப்பாதான் என்பது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்ததும், அவர்களை பாஜகவில் இணைக்க, எடியூரப்பா விரும்பியபோது, பாஜக தலைவரான எடியூரப்பா அதை விரும்பவில்லை என தெரிகிறது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, பிறகு, பொதுத் தேர்தலை சந்திக்கலாம் என்பதுதான் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் விருப்பமாக இருந்தது. ஆனால் பிடிவாதமாக மறுத்துவிட்டார் எடியூரப்பா.
அமித் ஷா ஓகே
கைக்கு வந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதால் அமித் ஷாவை சமாதானப்படுத்தி அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் கூறி விட்டார் எடியூரப்பா. வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி கொடுப்பதிலும் வெற்றி பெற்றுவிட்டார் அவர். எடியூரப்பா சொல்வதை தவிர அமித் ஷாவுக்கு வேறு ஆப்ஷன்கள் இல்லை. இந்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில் 12 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி அதன் மூலம் எடியூரப்பா தனது பராக்கிரமத்தை நிரூபித்துள்ளார்.
தலைவர்கள்
ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய பிரதேசத்தில், சிவராஜ் சிங் சவுகான் போன்ற அந்தந்த மாநில பாஜகவில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் என்பது மிகவும் அரிது. கர்நாடகவில் எடியூரப்பாவுக்கு மாற்று கிடையாது. எனவேதான் அவருக்காகவே, 75 வயதை தாண்டிய பிறகு அரசியலில் இருந்து, ஓய்வு பெற்று விட வேண்டும் என்பது போன்ற சில விதிமுறைகளை தளர்த்தி கொண்டது பாஜக தலைமை.
செல்வாக்கு
2012 ஆம் ஆண்டு பாஜகவை விட்டு வெளியேறி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி அடுத்தத் தேர்தலிலேயே 10 சதவீதம் வாக்குகளை பெற்று காட்டியவர் எடியூரப்பா. அந்த தேர்தலில் பாஜக, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாமல் காங்கிரசிடம் தோற்றுப்போனது. எனவேதான் எடியூரப்பா என்ன சொன்னாலும் கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது அமித்ஷாவுக்கு.
லிங்காயத்து ஜாதி ஆதரவு
பொதுவான மக்கள் செல்வாக்கு என்பதை தாண்டி, லிங்காயத்து ஜாதி பிரிவினரிடையே அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறது, கர்நாடகாவை பொறுத்தளவில் லிங்காயத்து ஜாதியினர்தான் மக்கள் தொகை அடிப்படையில் மிக அதிகம் என்பது அவருக்கு மற்றொரு பலம் ஆகும். எனவே எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்து விடக்கூடாது என்பதில் லிங்காயத்து மக்கள் மிகவும் உறுதி காட்டியதன் விளைவு தான் இந்த தேர்தல் வெற்றி.
காங்கிரஸ் தோல்வி
மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய உட்கட்சி பூசல் அந்த கட்சியை வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல கூடிய பரிதாப நிலைக்கு மாற்றியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, டி.கே. சிவகுமார் போன்றவர்கள் மதசார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்று விரும்பிய போது, சித்தராமையா அதற்கு முட்டுக்கட்டை போட்டார். கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கூட தனது சித்தராமையாவின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர்தான், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர். இப்போது எல்லாம் முடிந்த பிறகு, தனது எதிர்க்கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார் சித்தராமையா. இந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குதான் பெரிய பின்னடைவு. எந்த ஒரு தொகுதியிலும் அக்கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை. எனவே அந்த கட்சிக்கு இது பெரிய இழப்பாக கருதப்படுகிறது.