கர்நாடகா: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மீண்டும் பல்டி- குமாரசாமி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பு!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என திடீரென அறிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ என். மகேஷ்.
கர்நாடகா அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியிருக்கிறார். இதன் மீதான விவாதம் இன்று முடிவடைந்து வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
முன்னதாக குமாரசாமி உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாய் 2 முறை கெடு விதித்தார். இதை குமாரசாமி நிராகரித்திருந்தார்.
அத்துடன் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் முடிவெடுக்க கோரும் வழக்கில் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக சந்தேகங்கள் கேட்டு உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் குமாரசாமியும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடுவது ஏன்? எம்எல்ஏக்களுக்கு குமாரசாமி எழுதிய முக்கிய லெட்டர்!
மேலும் மும்பையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டோம் என வீடியோ மூலம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இதனிடையே குமாரசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ், வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிப்பேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தற்போது, வாக்கெடுப்பின் போது குமாரசாமி அரசை ஆதரிப்பேன் என அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தமது ட்வீட்டர் பக்கத்தில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது என கூறியிருந்தார்.
இதையடுத்து அக்கட்சி எம்.எல்.ஏ. மகேஷ் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.