கஃபே காபி டே உரிமையாளர் சித்தார்த்தா மரணத்தின் பின்னணி என்ன? எம்எல்ஏ நண்பர் பகீர் குற்றச்சாட்டு
Recommended Video
பெங்களூர்: கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மங்களூர் அருகேயுள்ள நேத்ராவதி நதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மாயமான 36 மணி நேரத்திற்கு பிறகு, இப்படி ஒரு கோலத்தில், மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டார். எனவே, அவரது மரணம் தொடர்பாக பல்வேறு மர்மம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சித்தார்த்தாவின், நெருங்கிய நண்பரும் ஸ்ரீருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான, டி.டி.ராஜகவுடா அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நெருக்கம்
அவர் கூறியதாவது: சித்தார்த்தா என்னுடைய நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தார், கடந்த 40 ஆண்டுகளாக நாங்கள் நெருங்கியவர்களாக இருந்தோம். நான்கைந்து நாட்களுக்கு முன்பு அவர் வருமான வரி டார்ச்சர் குறித்து குறிப்பிட்டு வருத்தப்பட்டார். அவர் இப்படி கஷ்டப்படுத்தப்படாவிட்டால், அவர் உயிர் பிழைத்திருப்பார்.
பொருளாதாரம்
நாட்டின் பொருளாதாரத்துக்காகவும், கர்நாடகாவுக்காகவும் சித்தார்த்தா பங்களித்தார். கிராமங்களைச் சேர்ந்த 30-50 ஆயிரம் பேருக்கும், ஏழைகளுக்கும் வேலை கொடுத்தார். கடன்களைத் தீர்ப்பதற்காக அவர் தனது சில சொத்துக்களை விற்க விரும்பினார். கடன்களை விடவும் சித்தார்த்தா, அதிகமான சொத்துக்களைக் கொண்டிருந்தார்". இவ்வாறு ராஜகவுடா தெரிவித்தார்.
கடிதம்
காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சித்தார்த்தா, காபி டே குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அந்த கடிதம் செய்தி நிறுவனமான ANIல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள்
வருமான வரி அதிகாரியால் துன்புறுத்தப்படுவதாகக் அந்த கடிதத்தில் சித்தார்த்தா குமுறியுள்ளார். சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்க முடியாமல் போனதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் கூறியுள்ளார்.