காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்
பெங்களூர்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கான நீர்வரத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நன்கு மழை கொட்டி வருகிறது. அதிலும் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் பகுதியில் 36 சென்டிமீட்டர் மழை கொட்டி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று கர்நாடகாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது காவிரி நீர்பிடிப்பு பகுதி ஆகும்.
திருச்சி கள்ளிக்குடி சந்தையில் விவசாயிகளின் விளைபொருள் நேரடி விற்பனை தொடங்கியது
எடியூரப்பாவுக்கு சிகிச்சை
மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் போன்றவை காரணமாக அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் எடியூரப்பா தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார். கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக எடியூரப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதால், அவர் தொலைபேசி வாயிலாக தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அரசு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
அமைச்சரும் வீட்டில்
வருவாய் துறை அமைச்சர் அசோகா, தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருப்பதால் அவரும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்து வருகிறார் அசோகா. உடுப்பி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, சிமோகா, சிக்கமகளூர் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளத்திற்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீட்பு படை
தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை அந்த மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் கொரானா வைரஸ் பரவல், மற்றொரு பக்கம் வெள்ள அபாயம் என, இரட்டை பிரச்சினையில் அந்த மாவட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மலையோர மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை கொட்ட கூடும் என்று கூறப்படுகிறது.
காவிரியில் அதிக தண்ணீர்
காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி பகுதியில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஏற்கனவே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. எனவே தமிழகத்தில் காவிரி கரையோர மாவட்ட பகுதிகளில் வசிக்க கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.