கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவகுமார் வீடுகளில் சிபிஐ ரெய்டு.. தலைவர்கள் கண்டனம், தொண்டர்கள் ஆக்ரோஷம்
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூர், சதாசிவ நகர் பகுதியில் உள்ள டிகே சிவகுமார் வீட்டில் இன்று காலை முதல் 6 மணி முதல் 60 க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் மட்டும் கிடையாது. வேறு வேறு பகுதியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். சிவகுமார் வீட்டில் மட்டுமல்லாது பிற பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பண்ணை வீடுகள் என மொத்தம் சுமார் 14 பகுதிகளில் சிபிஐ சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
டிகே சிவகுமாரை கைது செய்தனர்
2018 ஆம் ஆண்டு மே மாதம் இதே போல சிபிஐ அதிகாரிகள் டிகே சிவகுமார் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தினர். அப்போது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை இவர் சட்டவிரோதமாக மாற்றினார் என்று குற்றம்சாட்டி ரெய்டு நடந்தது. இதேபோல அமலாக்கத் துறையும் விசாரணையை ஆரம்பித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை சிவகுமாரை கைது செய்தது. இது மட்டுமல்லாது சிவகுமாருக்கு சொந்தமான 67 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆனால் குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முற்பட்டதாகவும் ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து சிவகுமார் பாதுகாத்தது தான் அவர் மீதான பாஜகவின் கோபம் எனவும், எனவேதான் சிபிஐ ரெய்டு நடந்ததாகவும் அப்போது காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
கண்டனங்கள்
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பாக டிகே சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். தற்போது அவரது வீட்டில் மறுபடியும் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
சித்தராமையா கண்டனம்
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜக எப்போதுமே பழி வாங்கும் அரசியல் நடத்துவதும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் வழக்கம். இடைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், சிவகுமார் வீட்டில் நடத்தப்படும் சிபிஐ ரெய்டு அப்படியான ஒரு முயற்சிதான். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.
தொண்டர்கள் ஆவேசம்
இதனிடையே, மத்திய புலனாய்வு அமைப்புகள் அவ்வப்போது சிவகுமாரிடம் விசாரணை நடத்துவதை வாடிக்கையாக்கிவிட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் கோபமடைந்துள்ளனர். சிவகுமார் வீட்டு முன்பாக குவிந்த தொண்டர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி, மோடி உருவப்படத்தை கிழித்து எறிந்து வருகிறார்கள். தொண்டர்கள் ஆக்ரோஷம் அதிகரிப்பதால், கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.