என்னை வீழ்த்த முடியாது... ரெய்டு குறித்து காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேட்டி!!
பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 74.93 கோடி அளவிற்கு தனது பெயரில் மற்றும் தனது குடும்பத்தினரின் பெயரில் சொத்து சேர்த்ததாகக் கூறி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் வீடு மற்றும் அலுலகங்களில் இன்று சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. அப்போது, ரூ. 57 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் தன்னை வீழ்த்த முடியாது என்று டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக டிகே சிவகுமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து இருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் கர்நாடகாவில் ஒன்பது இடங்கள், டெல்லி, மும்பையில் நான்கு இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இன்று மேற்கொண்டு இருந்த சோதனையில் ரூ. 57 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், வங்கி தொடர்பான ஆவணங்களை சிபிஐ பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. டிகே சிவகுமாரின் சகோதார் டிகே சுரேஷ், அவரது நெருங்கிய நண்பர் சச்சின் நாராயண் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
பெங்களூரு புறநகர் எம்பியாக இருப்பவர் சுரேஷ். ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர் சுரேஷ். முன்பு டிகே சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோதும், சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
வரி ஏய்ப்பு செய்ததாக டிகே சிவகுமார் மீது வருமான வரித்துறை புகார் பதிவு செய்து இருந்தது. இதையடுத்து 2018, செப்டம்பரில் சட்ட விரோத பண பரிமாற்றத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறையின் புகாரின் கீழ் டிகே சிவகுமார் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கை சிபிஐ பதிவு செய்து இருந்தது.
2ஜி மேல்முறையீட்டு வழக்கு...வாதம் துவங்கியது...விசாரணை நாளை ஒத்தி வைப்பு!!
நடப்பாண்டின் துவக்கத்தில் டிகே சிவகுமார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை மேற்கொள்வதற்கு சிபிஐக்கு மாநில அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆரம்பகட்ட விசாரணை முடிந்து சிவகுமார் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
பாஜக அரசின் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடத்தப்படும் ''ரெய்டு ராஜ்'' செயலின் ஒரு அங்கம்தான் இது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். ''பாஜக எப்போதும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இடைத்தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். நான் இதை கடுமையாக எதிர்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கர்நாடகா காங்கிரஸ் தலைவராக சிவகுமார் இருந்து வருகிறார். இதை முன்னிட்டு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டத்திற்கு புறம்பாக ரூ. 800 கோடி அளவிற்கான சொத்தை டிகே சிவகுமார் சேர்த்து இருப்பதாகக் கூறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவரை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்து இருந்தது. இந்த வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இதுகுறித்து டிகே சிவகுமார் அளித்திருந்த பேட்டியில், ''இதில் முற்றிலும் அரசியல் உள்ளது. கர்நாடகா ஊழல் மற்றும் உத்தரப்பிரதேச பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தேன். இடைத்தேர்தல் வேறு மாநிலத்தில் வருகிறது. ஆதலால், பாஜக தன்னால் முடிந்ததை செய்கிறது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்னை வீழ்த்த முடியாது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்'' என்றார்.