சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், பெங்களூர் நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தினர். சிறை வளாகத்தில் பல கைதிகளிடமிருந்து கஞ்சா, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரப்பன அக்ரஹாரா சிறையில், இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திடீர் ரெய்டுகளை நடத்தினர். சிறைச்சாலைக்குள் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் இருப்பது கண்டறியப்பட்டால் இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல சிறை கைதிகளுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த ரெய்டு நடைபெற்றது.
பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் ஆண்களுக்கு தனிப் பிரிவும், பெண்களுக்குத் தனிப் பிரிவும் உள்ளது. இதில் பெண்களுக்கான பிரிவில்தான் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதில் ஆண்கள் பிரிவில் நடத்தப்பட்ட ரெய்டில், 37 கத்திகள்/அறுக்கும் ஆயுதங்கள், கஞ்சா, செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்பு ஒருமுறை இதை சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட ரெயிடின்போதுதான், சசிகலாவுக்கு தனி சமையலறை, தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதன வசதி கொண்ட அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து கொண்டிருப்பது அம்பலமானது.
இன்றைய தினம் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திவரும் சோதனையின் முடிவில், சசிகலா தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.