முக்கிய புள்ளி மிரட்டினார்? போலீசுக்கு கிடைத்த க்ளூ.. சித்தார்த் காணாமல் போகும் முன் நடந்தது என்ன?
நேற்று சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த்துக்கு வந்த ஒரு போன் கால்தான் அவர் காணாமல் போக முக்கிய காரணம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
Recommended Video
பெங்களூர்: நேற்று சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த்துக்கு வந்த ஒரு போன் கால்தான் அவர் காணாமல் போக முக்கிய காரணம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி காபி ஷாப் மற்றும் காபி எஸ்டேட் நிறுவனமான கஃபே காபி டேவின் நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.
நான் ஒரு தொழில் அதிபராக தோல்வி அடைந்துவிட்டேன் என்று கூறி, லெட்டர் எழுதிவிட்டு, சொத்து விவரங்களை தன்னுடைய லெட்டருடன் இணைத்துவிட்டு, விஜி சித்தார்த் காணாமல் போய் இருக்கிறார். அவர் காணாமல் போகும் முன் நடந்த சில சம்பவங்கள் பெரிய அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.
எங்கே செல்ல திட்டம்
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரில் நடக்கும் பிஸ்னஸ் மீட் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் நேற்று மாலை விஜி சித்தார்த் பெங்களூரில் இருந்து கிளம்பி இருக்கிறார். ஆனால் அவர் இன்னோவா காரில் டிரைவருடன் செல்ல தொடங்கிய சில நிமிடத்தில் முக்கிய போன் கால் ஒன்று வந்துள்ளது. காரில் கத்தியபடியே அவர் போன் பேசிக்கொண்டு வந்துள்ளார்.
நீண்ட நேரம்
காரில் நீண்ட நேரம் போனில் பேசிய அவர், மங்களூரை நோக்கி செல்லும்படி கூறி உள்ளார். டிரைவரும் முக்கிய விஷயம் எதோ என்று நினைத்து காரை மங்களூர் நோக்கி செலுத்தி உள்ளார். ஆனால் மங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சில கிலோ மீட்டர்கள் சென்ற பின், காரை கேரளாவிற்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். டிரைவரும் அதை செய்துள்ளார்.
எப்படி இறங்கினார்
இத்தனை சம்பவம் நடந்த போதும் அவர் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் போனில் பேசிக்கொண்டு இருந்தவர் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். கார் நிறுத்தப்பட்ட இடம் ஜெப்பினா மோகரூ என்ற மங்களூருக்கு அருகே இருக்கும் பகுதியாகும். நேத்ராவதி நதி செல்லும் இந்த பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு முனையில் காரை நிறுத்த சொல்லி இருக்கிறார் விஜி சித்தார்த்.
விஜி சித்தார்த் என்ன செய்தார்
போனில் யாரிடமோ சண்டை போட்டபடி விஜி சித்தார்த் பேசிக்கொண்டு இருந்தார். தனது கார் டிரைவரை பாலத்தின் இன்னொரு பக்கம் காத்திருக்க சொல்லிவிட்டு, இவர் பாலத்தை நோக்கி நடந்து உள்ளார். அதன்பின் நீண்ட நேரம் அவர் திரும்பி வராமல் போனதை அடுத்து, டிரைவர் வீட்டிற்கும், போலீசிற்கும் தகவல் கொடுத்தார்.
யார் அது
அதன்படி விஜி சித்தார்த்திடம் போனில் பேசிய நபர், அவரை மிரட்டி இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பு கூறுகிறது. விஜி சித்தார்த்தை தற்கொலைக்கோ , தலைமறைவாகவோ இந்த போன் கால் தூண்டி இருக்கலாம், என்று போலீசார் கூறுகிறார்கள். அதே சமயம் போலீசார், இந்த போன் எண்ணை கண்டுபிடித்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
தொழில் அதிபர்
பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரிடம் விஜி சித்தார்த் போனில் பேசி இருக்கிறார். சுமார் 2.30 மணி நேரம் இந்த போன் கால் பேசப்பட்டுள்ளது. இவரை போலீசார் விரைவில் விசாரிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் போலீஸ் இவரின் பெயரை இன்னும் வெளியிடவில்லை. இவர்தான் விஜி சித்தார்த்தை மிரட்டி இருக்க வாய்ப்புள்ளது. அந்த விரக்தியில் இவர் தவறான முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள்.