"அந்த மாதிரி" கோலத்தில் எடியூரப்பா.. சிக்கிய சிடி.. மிரட்டி, மிரட்டியே.. பாஜக சீனியர்கள் பகீர்!
பெங்களூர்: "அந்த மாதிரி" கோலத்தில் எடியூரப்பா இருந்த சிடியை அவரது சொந்தக்காரரே ரெக்கார்டு செய்துள்ளார். அதை காட்டி மிரட்டி மிரட்டியே, சிலர் அமைச்சர் பதவியை பெற்றுவிட்டனர் என்று, குண்டை தூக்கிப் போட்டுள்ளார் கர்நாடக பாஜக மூத்த எம்எல்ஏவும், முன்னாள் மத்திய அமைச்சருமான, பி.ஆர்.பாட்டில் யத்னால்.
இவர் மட்டுமல்ல, மேலும் சில பாஜக தலைவர்களுமே, இந்த 'சிடி' விஷயத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் எடியூரப்பா.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி கலைந்து பாஜக ஆட்சியை பிடித்தது. இப்படி கூட்டணி ஆட்சி கலைய அந்த கட்சிகளைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததுதான் காரணம். இதன் பின்னணியில் பாஜகதான் இருப்பதாக குற்றம்சாட்டப்படது.
இதை உறுதி செய்வதை போலவே, விலகிய காங்கிரஸிசிலிருந்தும், ம.ஜ.தவிலிருந்தும் விலகிய எம்எல்ஏக்கள், பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பும் தரப்பட்டது. இப்படியாக ஆட்சியை பிடித்து, இடைத் தேர்தல் வெற்றியால் ஆட்சியை தக்கவும் வைத்துக் கொண்டார் எடியூரப்பா. ஆனால், பிற கட்சிக்காரர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் பாஜகவில் இருந்த சீனியர்கள் கடுப்பாகிவிட்டனர்.
அமைச்சரவை விஸ்தரிப்பு
பாஜகவிலுள்ள பல சீனியர்கள் அதிலும், எடியூரப்பாவின் ஆதரவாளர்களாக அறியப்படும் பலருக்கும் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை விஸ்தரிப்பில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரேணுகாச்சாரியா, சித்து சவதி, எஸ்.ஏ.ராமதாஸ், அபய் பாட்டில் போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் யோகேஷ்வர் உட்பட 7 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை
இந்த நிலையில்தான், அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்க ஆரம்பித்துள்னர். பி.ஆர்.பாட்டில் யத்னால், ஒரு படி மேலே போய் ஒரு திடுக்கிடும் தகவலை சொல்லியுள்ளார். அவர் அளித்த பேட்டியை பாருங்கள்: எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஒரு ஆபாச சிடி அவரது சொந்த உறவினரால் அவரது வீட்டில் வைத்து ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. இப்போது அமைச்சர் பதவி கிடைத்த சிலருக்கு ஏற்கனவே அந்த சிடி கிடைத்தது. அதை வெளியிட்டு விடுவோம் என்று எடியூரப்பாவின் மிரட்டி தங்களுக்கு அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கூடுதல் நிதி
எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகிய இருவரும் தங்களது சுயலாபத்திற்காக கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபாச சிடி சில காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்களுக்கும் கிடைத்துள்ளது. அவர்களும் இதைக் காட்டி மிரட்டி மிரட்டியே தங்கள் தொகுதிக்கு கூடுதலாக அரசின் நிதியை பெறுகிறார்கள். பாஜக எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்குக் கூட இவ்வாறு அதிக நிதி கிடைப்பது இல்லை. விரைவிலேயே இந்த சிடி பொதுவெளிக்கு வரத்தான் போகிறது என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
பாஜகவில் குழப்பம்
பாஜகவை சேர்ந்த மேலவை உறுப்பினர் விஸ்வநாத் கூட எடியூரப்பா மீது இதே போன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர். ஆனால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு எடியூரப்பா ஆட்சி அமைக்க உதவி செய்தவர்களில் ஒருவர் விஸ்வநாத். இதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
பணம் கொடுத்து அமைச்சர் பதவி
விஸ்வநாத் கூறியதை பாருங்கள்: எடியூரப்பா இடம்பெற்றுள்ள அந்த ஆபாச சிடி விரைவில் பொதுவெளிக்கு வரும். எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் நடத்தி வரும் குடும்ப அரசியலை பிரதமர் நரேந்திர மோடி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு யோகேஷ்வர் பணம் கொடுத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்டுதான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. யோகேஷ்வர் ஒரு மோசடிப் பேர்வழி என்பது தெரியும். வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அப்படி இருந்தும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஸ்வநாத் குற்றஞ்சாட்டினார். விஸ்வநாத் மற்றும் யோகேஷ்வர் ஆகிய இருவருமே ஒக்கலிகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். பழைய மைசூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
நீதி விசாரணை
சொந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களே எடியூரப்பா மீது ஆபாச சிடி புகாரை சொல்லி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் அளித்த பேட்டியில், முதல்வரை சிலர் மிரட்டுவதாக வெளியாகியுள்ள தகவல் மிகவும் ஆபத்தானது. உடனடியாக இதுபற்றி காவல் துறையில் புகார் அளித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரம் எடியூரப்பா இதுபற்றி கூறுகையில், பாஜகவின் 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். 34 பேருக்கு மட்டும்தான் அமைச்சர் பதவி தர முடியும். இதில் என்னால் எதுவும் செய்ய முடியாது. என் மீது ஏதாவது புகார் இருந்தால் பாஜக மேலிடத்திடம் அதைச் சொல்லலாம். ஆனால் இதுபோன்ற மோசமான குற்றச் சாட்டுகளை பொதுவெளியில் வைப்பது நல்லது கிடையாது என்று தெரிவித்தார்.