இவ்வளவு பெரிய வெற்றி.. இதுதான் இப்போ பிரச்சினை.. எடியூரப்பாவுக்கு காத்திருக்கு அக்னி பரிட்சை
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, முதல்வர் எடியூரப்பாவுக்கு புதிதாக ஒரு பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
கர்நாடகாவில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க பிரச்சினைக்கு பிறகு, மொத்தம் 17 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 15 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.
குறைந்தபட்சம் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற அளவுக்கு சட்டசபையில் கட்சிகளின் பலம் உள்ள நிலையில், 12 தொகுதிகளில் வெற்றி என்பது போனஸ். அதேநேரம் எத்தனை தொகுதிகளில் அதிகம் வெற்றி பெறுகிறதோ அவ்வளவுக்கு எடியூரப்பாவுக்கு தலைவலியும் அதிகம்.
தலை தப்பியது.. இனி எதுவும் செய்யலாம்.. அமித் ஷா வைத்த ஆசிட் டெஸ்டில் வென்ற எடியூரப்பா!
அனைவருக்கும் அமைச்சர் பதவி
ஏனெனில் தேர்தலுக்கு முன்பாக தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா ஒரு வாக்குறுதி வழங்கியிருந்தார். அதாவது, மறுபடியும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்குமே அமைச்சர் பதவியை வழங்குவேன் என்று அவர் கூறியிருந்தார். இங்கு தான் சிக்கலே, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மாவட்ட பிரதிநிதித்துவம்
அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும்போது, அனைத்து ஜாதியினரும் மற்றும் மாவட்ட வாரியாக பலருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா உள்ளார். தற்போதைய நிலையில் 16 இடங்கள் அமைச்சரவையில் காலியாக உள்ளன. தற்போதைய இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்றவர்கள், போட்டியிட்ட தொகுதிகள் அடிப்படையில் பார்த்தால், இவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் கிட்டத்தட்ட மாநிலத்தின் பாதி மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலைதான் உள்ளது.
லிங்காயத்து ஜாதி ஆதிக்கம்
அதுமட்டுமின்றி, எடியூரப்பா சார்ந்துள்ள லிங்காயத்து சாதிப் பிரிவினர் எண்ணிக்கை என்பது அமைச்சரவையில் 11 என்ற அளவில் அதிகரிக்கும். இதற்கு அடுத்தபடியாக, ஒக்கலிகர் ஜாதியை சேர்ந்தவர்கள் 6 பேர்கள் மட்டுமே அமைச்சராக முடியும். இதனால் ஜாதிய ரீதியாகவும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் நியாயமான முறையில் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.
பெரிய வெற்றி, பெரிய சிக்கல்
வெறும் 6 முதல் 7 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்தால் அமைச்சரவையை அமைப்பதில் எடியூரப்பாவுக்கு பெரிய சிக்கல்கள் எழுந்திருக்காது. இப்போது பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவியை வழங்க வேண்டிய நிலையில் எடியூரப்பா உள்ளார். இதனால், ஏற்கனவே பாஜகவில் உள்ள சீனியர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது. இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவேதான் தேர்தல் முடிவுக்குப் பிறகு, எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய அக்னி பரிட்சை காத்துக்கொண்டு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.