'சந்திரயான் 2' பெங்களூரில் தரையிறங்கியதா..? நாட்டையே உலுக்கும் வீடியோ
Recommended Video
பெங்களூர்: சந்திரயான் 2 விண்கலம் வரும் 7ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக, பெங்களூரில் சந்திரயான் தரை இறங்கி விட்டது என்று பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஒரு வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. நிலவை நோக்கி பாய்ந்து சென்று உள்ள சந்திரயான் 2, எப்படி பெங்களூரில் தரை இறங்கியது என்று யாரும் குழம்ப வேண்டாம். இதில் ஒரு ட்ரிக்ஸ் உள்ளது.
நாட்டையே குழப்பி வரும் அந்த வீடியோவின் பின்னணி என்ன என்பது பற்றி விசாரித்தால் பல ஆச்சரிய தகவல் வெளியானது. அதுகுறித்து நீங்களே பாருங்கள்.
வெள்ளை உடை
வைரலாக உள்ள அந்த வீடியோவில் என்ன உள்ளது? முகத்தில் மாஸ்க் அணிந்தபடி விஞ்ஞானி ஒருவர் நடமாடுகிறார். அவரை எப்படி விஞ்ஞானி என்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? விஞ்ஞானிகள் அணிவது போன்ற ஒரு வெள்ளை நிற உடையுடன் முகத்தில் மாஸ்க்கும் அணிந்துள்ளார் அவர். அவர் நடந்து செல்லும் இந்த காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்!
கரடு முரடு சாலை
கரடுமுரடாக, பள்ளமும் மேடுமாக உள்ள தரைப்பகுதியில் விஞ்ஞானி நடந்து போவதைப் போலவே காட்சியளிக்கும் அந்த வீடியோ படம் எடுக்கப்பட்டது பெங்களூருவில். பெங்களூர் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது யஸ்வந்த்பூர், அடுத்த ஹெரோஹள்ளி. இந்த ஏரியாவில் தான் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.
ஆட்டோ
குண்டும், குழியுமாக உள்ள ரோட்டின் அவலத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான் இதன் நோக்கம். சட்டென்று இந்த வீடியோவை பார்ப்பதற்கு நிலவில் விஞ்ஞானி நடந்து செல்வது போலத்தான் தெரியும். ஆனால் திடீரென அந்த பகுதியில் ஒரு ஆட்டோ சர்ரென்று தாண்டி செல்லும்போதுதான் பார்க்கும் நமக்கே சிரிப்பு வந்துவிடும். அடடே இது நம்மூர் ரோடுதானா என்று ஆச்சரியமும் ஏற்படும்.
|
சாலை நிலைமை
யாராக இருந்தாலும் இது நிலவின் மேற்பரப்பு தான் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு மோசமான ரோடு அமைப்பு அங்கே உள்ளது என்பதை வீடியோவில் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதை உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கிரியேட்டிவ் ஐடியா செய்துள்ளார், பாதல் நஞ்சுண்ட சுவாமி, என்ற ஆர்டிஸ்ட் மற்றும் அவரது குழுவினர். நஞ்சுண்ட சாமி எங்கெல்லாம் சாலைகள் சரியில்லையோ அதையெல்லாம் சீரமைக்கும் ஆர்வலராக உள்ளார். இப்போது எங்கு பார்த்தாலும் சந்திராயன் 2 பற்றிய பேச்சுதான் என்பதால், அதையே மையப் பொருளாக வைத்து இதுபோல விழிப்புணர்வு ஊட்டுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆர்டிஸ்ட் ஆச்சே, நல்லாவே கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. சபாஷ்!