குட் நியூஸ்.. விக்ரம் லேண்டர் உடையவில்லை.. சாய்ந்த நிலையில் பத்திரமாக உள்ளது
Recommended Video
பெங்களூர்: விக்ரம் லேண்டர் பத்திரமாக சாய்ந்த நிலையில் இருப்பதாக, பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், விஞ்ஞானிகள் உடனான தொடர்பை கடைசி நேரத்தில் இழந்து விட்டது.
இந்த நிலையில் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய ஆர்பிட்டர் லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படமாக எடுத்து இஸ்ரோவுக்கு, நேற்று அனுப்பி வைத்தது.
சந்திரயான் 2.. பாகிஸ்தான் அமைச்சர்தான் அப்படி.. ஆனா மக்கள் சொக்க தங்கமா இருக்காங்களே!
உற்சாகம்
இந்த தகவல் கிடைத்ததும், மக்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதேநேரம், விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் இழந்தது இழந்ததுதான். இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்திதான். இந்த நிலையில் மற்றொரு தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
உடையவில்லை
இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாக கூறி வெளியிட்டுள்ள அந்த தகவலில், விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங், ஆகவில்லை என்ற போதிலும், ஹார்ட்லேண்ட் ஆகி நிலவில் விழுந்துள்ளது. அதேநேரம் புகைப்படத்தில் இருப்பதை பார்க்கும்போது, அது இரண்டு மூன்று துண்டுகளாக உடையவில்லை. அனுப்பியபோது, எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. சாய்வான நிலையில் இருக்கிறது, அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்கள் எனக் கூறுகிறது அந்த செய்தி.
முயற்சிகள்
லேண்டரிலிருந்து மீண்டும் தகவல் தொடர்பை பெறமுடியுமா என்பதற்கான அனைத்து வகை, முயற்சிகளையும் செய்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவுக்கு இந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி மேலும் தெரிவிக்கிறது.
14 நாட்களுக்குள் சிக்னல் கிடைக்குமா?
லேண்டர் மற்றும் அதற்குள் இருக்கக்கூடிய ரோவர், ஆகியவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும். 14 நாட்களுக்குள் அதிலிருந்து தகவல்தொடர்பு கிடைக்கா விட்டால், அதன் பிறகு லேண்டர் பலனற்றுப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலி சமூக வலைத்தளங்கள் பக்கங்கள் உலவுவதாக இஸ்ரோ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவன் எந்த ஒரு சமூக வலைத்தள பக்கத்திலும், செயல்படவில்லை என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.