கூண்டுக்குள் இருந்த சிறுத்தையை சீண்டிய மஞ்சுநாத்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூரம்.. திக், திக் வீடியோ
Recommended Video
பெங்களூர்: சிறுத்தையை சீண்டிய நபர் நொடிப்பொழுதில் என்ன ஆனார் என்பது தொடர்பான ஒரு வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், திப்தூர், என்ற நகரின் அருகே உள்ள பகுதியில், சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுத்தையை பிடிக்க, கூண்டு மூலம், பொறிவைத்தனர். இந்த கூண்டுக்குள் அதிர்ஷ்டவசமாக சிறுத்தை சிக்கிக் கொண்டது.
இதை பத்திரமாக வனத்திற்குள் கொண்டு சென்று விட வேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆனால் சிறுத்தை பிடிபட்ட தகவலறிந்து, சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமத்து மக்களும் அதை பார்ப்பதற்கு படையெடுக்க தொடங்கினர்.
நோ எக்ஸாம்.. நோ இண்டர்வியூ.. 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள்.. ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்!
செடியின் கிளை
பார்த்துவிட்டு சும்மா போவதுதானே.. ஆனால், அதில் ஒரு நடுத்தர வயது ஆண் (பெயர் மஞ்சுநாத்) சிறுத்தையிடம் சென்று, சேட்டை செய்தார். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். மஞ்சுநாத்தோ, ஒரு செடியின் கிளையை உடைத்து, அதன் இலைகளை சிறுத்தையின் கூண்டுக்குள் விட்டு, அதன் முகத்தருகே ஆட்டிக் கொண்டு இருந்தார்.
சினம் கொண்ட சிறுத்தை
ஏற்கனவே கூண்டுக்குள் சிக்கியதால் கோபத்தில் இருந்த சிறுத்தை, இவ்வாறு தன் முகத்துக்கு அருகே வந்து செடியின் கிளையை ஒருவர் ஆடிக் கொண்டே இருப்பதால் கடுமையாக சினம் கொண்டது. அதைப் பார்த்த மஞ்சுநாத்தின் நண்பர்கள், கூண்டுக்கு, அருகே செல்ல வேண்டாம், தள்ளி வந்து விடு, தள்ளி வந்து விடு என்று கன்னட மொழியில் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால் மஞ்சுநாத் கேட்பதாக இல்லை.
நொடிப்பொழுது
சிறுத்தை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, நொடிப்பொழுதில் மஞ்சுநாத் கையிலிருந்த அந்த செடிக்கிளையை சட்டென பிடித்து இழுத்தது. சிறுத்தையின் பலத்தால், நிலைதடுமாறிய மஞ்சுநாத், கூண்டின் அருகே சென்று விழுந்தார். அவ்வளவுதான் ஒரு வினாடி நேரம் கூட இருக்காது.. அதற்குள்ளாக கையை பலமாக கவ்விப்பிடித்தது சிறுத்தை.
ஒரே சத்தம்
உடனே கூட்டத்தினரிடையே ஐயோ, அம்மா என்ற கூக்குரல்கள் எழுந்தன. சில நண்பர்கள் ஓடிச் சென்று மஞ்சுநாத்தை பிடித்து இழுத்தனர். அவரது கையை பார்த்தவர்களுக்கு கடுமையான அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சில இஞ்ச் அளவுக்கு, சதை துண்டாகி போயிருந்தது. மஞ்சுநாத் கையில், ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
சிறுத்தையை சீண்டாதே
நல்லவேளையாக கை எலும்பு உடையவில்லை. இதை பார்த்த நண்பர்கள், இதற்குத்தான் நாங்கள் அப்பவே சொன்னோம்.. பக்கத்தில் செல்லாதே, செல்லாதே என்று கேட்டியா என்று கடிந்து கொள்ளும் வார்த்தைகளும் அந்த வைரல் வீடியோவில் இடம் பெற்று உள்ளன. இதையடுத்து அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மஞ்சுநாத். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார். இதற்குத்தான் பெரியவர்கள் சொல்வார்கள்.. சிறுத்தையை சீண்டி பார்க்காதே என்று!