பெங்களூர் அல்சூர் ஏரிக்கு 'மூச்சு காற்று' கொடுத்து காப்பாற்றும் சென்னை இயந்திரம்!
பெங்களூர்: பெங்களூர் அல்சூர் ஏரியில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கு சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல பலன் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
பெங்களூரில் பல ஏரிகள் மாசுபாடு காரணமாக மோசம் அடைந்து விட்டன. பெங்களூரு ஏரி நீரில் பயிரிடப்பட்ட பயிர்களில் விளைந்த காய்கறிகளில் அதிக அளவுக்கு உலோக கலப்பு இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பெல்லந்தூர் ஏரியில் திடீரென நுரை பொங்கி சாலை வரை வழிந்து விடுவது வாடிக்கையாக மாறிவிட்டது. இப்படித்தான் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அல்சூர் ஏரி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அவ்வப்போது மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாக மாறிவிட்டது.
கழிவுநீர் கலப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள். அதிலும் குறிப்பாக, தொழிற்சாலை கழிவுகள் கலப்பது தான் மீன்கள் இறப்புக்கு காரணம்.
தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கிடுகிடுவென குறைந்துவிட்டதால், மீன்கள் இறந்தன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு சிறிய இயந்திரம் கை கொடுக்க ஆரம்பித்துள்ளது.
அதிகரித்த மாசு.. பெங்களூர் ஏரி நீரில் விளைவித்த காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள்.. ஆய்வில் ஷாக்
"இந்த இயந்திரம் ஏரியின் மையப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீரில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கிறது. ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரை வெளியே கொண்டு வந்து மீண்டும் அனுப்பும் பணியை இந்த இயந்திரம் செய்கிறது," என்று பெருநகர பெங்களூர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொத்தம் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அல்சூர் ஏரி. எனவே நாங்கள் 15 இயந்திரங்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளோம். இப்போதைக்கு இந்த இயந்திரத்தின் மூலமாக, எந்த அளவுக்கு தண்ணீரில் மாசுபாடு குறைந்துள்ளது என்பதை கண்டறிந்து பலன் கிடைப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டால், கூடுதல் இயந்திரங்களை கொள்முதல் செய்ய உள்ளோம், என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.