மொத்த நகரத்தையே ஐஸ் கட்டிக்குள் வைத்த மாதிரி வானிலை.. சுவிஸ் போல மாறிய பெங்களூர்! ப்பா என்ன குளிர்
பெங்களூரில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை குறைந்து மிகவும் குளிரான வானிலை நிலவி வருகிறது.
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை குறைந்து மிகவும் குளிரான வானிலை நிலவி வருகிறது. 2019 வருட தொடக்கமே பெங்களூரில் மிக மிக குளிராக தொடங்கி உள்ளதால் மக்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
பெங்களூர் எப்போதும் மிகவும் குளிரான நகரம் ஆகும். மே மாதத்தில் கூட பெங்களுரில் குளிர் அடிக்கும், கோடை காலத்தில் கூட அங்கு மழை பெய்யும்.
எப்போதும் ஜில் ஜில், கூல் கூல் என்று இருக்கும் பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மிக அதிக அளவில் குளிர் நிலவுகிறது. வெப்பநிலை திடீர் என்று குறைந்து இருக்கிறது. ஊர் மொத்தத்திற்கும் சேர்த்து வானத்தில் ஏசி போட்டது போல இருக்கிறது.
புத்தாண்டு எப்படி தொடங்கியது
பெங்களூரில் புத்தாண்டே மிகவும் குளிராகத்தான் தொடங்கியது. எப்போது பெங்களூரில் அதிகாலையில் 18-19 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவது வழக்கம். இது மிகவும் குளிரான வானிலை என்றாலும் கூட, பெங்களூர் மக்கள் இதற்கு பழக்கப்பட்டவர்கள்தான். ஆனால் திடீர் என்று நேற்று அதிகாலை 13-14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இதனால் குளிர் மக்களை வாட்டி எடுத்தது.
இரவு இன்னும் குறைந்தது
அதன்பின் நேற்று இரவு வெப்பநிலை மேலும் குறைந்தது. நேற்று இரவு 11 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. சாலைகள் முழுக்க பனி மூட்டமாக காணப்பட்டது. மக்கள் பலர் வேகமாக வீடு திரும்பியதால் பெரிய டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.
இன்னும் மோசமானது
இந்த நிலையில் இன்று அதிகாலை வெப்பநிலை இன்னும் மோசமானது. இன்று அதிகாலை 10 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. குளிரில் கைகள் உறையும் அளவிற்கு சென்றது. காலை பத்து மணி வரை 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது.
ஒரு பக்கம் கொண்டாட்டம்
இந்த குளிரால் மக்கள் அவதிப்பட்டாலும் ஒரு பக்கம் மக்கள் இதை சந்தோசமாக கொண்டாடிக் கொண்டுதான் இருந்தனர். பெங்களூர் இப்போதுதான் உண்மையான பெங்களூர் போல இருக்கிறது என்று சந்தோசப்பட்டனர். பெங்களூருக்கு அருகே இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஓசூரில் 11 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்தது.
இன்னும் 5 நாட்கள்
பெங்களூர் மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட வட தமிழகங்களிலும் இதேபோல குளிரான சீதோஷணம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து நாட்களுக்கு இப்படித்தான் குளிரான சூழ்நிலை நிலவும் என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் குளிருக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.