17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தன. முன்னாள் பிரதமர் மகன் ஹெச்டி குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
15 பேர் ராஜினாமா
14 மாதங்கள் ஆட்சி நீடித்து வந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 15 பேர் திடீரென தங்கள் எம்எல்ஏ பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தனர். இதனால் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.
கவிழ்ந்த அரசு
இதையடுத்து இரண்டு மூன்று நாட்களை தாண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் சென்ற நிலையில், குமராசாமி கடந்த ஜூலை 23ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீது வாக்கெடுப்பு நடத்தினார்.இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
கட்சி தாவல் தடை சட்டம்
இதையடுத்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறி 17 எம்எல்ஏக்களையும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 17 பேரையும் வரும் 2023ம் ஆண்டு வரை அல்லது இப்போதைய கர்நாடக சட்டசபை முடியும் காலம் வரையும் போட்டியிடவும் தடை விதித்தார்.
போட்டியிட அனுமதி
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. எனினும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
இதற்கிடையே கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிச.5ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
தீர்ப்புக்கு வரவேற்பு
இப்போது கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை வரவேற்பதாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே நாளையே 17 பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.