ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லணும்.. அதிர வைத்த குமாரசாமியின் ஆவேசம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஹொன்னலகரே பிரகாஷ் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, கொலையாளிகளை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பெரும் மன வேதனையில் கோபத்தில் தான் அவ்வாறு பேசியதாகவும், அதில் தவறு இல்லை என்றும் குமாரசாமி விளக்கியுள்ளார். குமாரசாமி பேசிய வீடியோ காட்சி பரவி வைரலாகி விட்டது. சம்பவ இடத்தில் நின்றபடி குமாரசாமி இவ்வாறு கூறினார்.
மத்தூர் நெடுஞ்சாலையில் வைத்து பிரகாஷை தடுத்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
|
ஆவேச குமாரசாமி
சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்தார் குமாரசாமி. அப்போது தொலைபேசியில் யாருடனோ பேசிய அவர், பிரகாஷ் நல்ல மனிதர். அவரைக் கொன்று விட்டனர். யார் கொன்றது என்று தெரியவில்லை. கொன்றவர்களை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும். ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறினார் குமாரசாமி.
பேச்சு வைரல்
இந்தப் பேச்சு வைரலாகி விட்டது. இதுகுறித்து பின்னர் விளக்கிய குமாரசாமி, இது கோபத்தில் கூறுவது. இயற்கையானது. அது முதல்வராக எனது உத்தரவு அல்ல. சம்பவத்தை நேரில் பார்த்து, கோபத்தில் வந்த வார்த்தை அது.
எல்லோருக்கும் வரும் கோபம்
எல்லோருக்கும் இதுபோல கோபம் வருவது இயல்பானது. கொலையாளிகளில் இருவர் சிறையில் இருந்தவர்கள். பெயிலில் வெளியே வந்து கொலை செய்துள்ளனர் என்றார் குமாரசாமி.
பழிவாங்க கொலை
இந்தக் கொலை பழிக்குப் பழி கொலை என போலீஸார் கூறுகின்றனர். இன்னொரு மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் கொலை விவகாரத்தில் பிரகாஷுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில்தான் பிரகாஷ் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.