என்ன இப்பவே இப்படி ஆட்டுது.. நடுங்கும் பெங்களூர் மக்கள்
பெங்களூர்: அதிகாரப்பூர்வ குளிர்காலம் இன்னும் பிறக்காமல் இருக்கலாம்.. ஆனால், பெங்களூர் அதன் மக்களை இப்போதே, அதிகாலை குளிரால் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இதமான வானிலைக்கு பெயர் பெற்றது கர்நாடக தலைநகரான பெங்களூர். வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்திலிருந்து இங்கு கடும் குளிர் காலம் ஆரம்பிக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக பெங்களூரில் குளிர் திடீரென அதிகரித்து வருகிறது.
அதிலும், அதிகாலை வேளைகளில் குளிர் ஆட்டிக்கொண்டு இருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, நவம்பர் 21 முதல், நவம்பர் 26ம் தேதிவரை, வெப்ப நிலை படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி 20.4 டிகிரி செல்சியசாக இருந்த பெங்களூர் குறைந்தபட்ச வெப்பநிலை, நவம்பர் 26ம் தேதியான நேற்று, 16.7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது.
அதேநேரம், அடுத்த சில நாட்களில் வெப்ப நிலை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதிகாலையில் இப்போது அதிக அளவுக்கு பனி மூட்டம் உள்ளது. இது குறையும் வாய்ப்பு உள்ளது. வங்க கடலில் இருந்து வரும் கிழக்கு காற்று காரணமாகத்தான் இப்போது குளிர் அதிகமாக இருக்கிறது. இது அடுத்த சில நாட்களில் குறையும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்கள் மாயமான வழக்கு.. குஜராத் ஹைகோர்ட் கோபம்.. 10ம் தேதி வரை கெடு
கர்நாடக இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர், சீனிவாச ரெட்டி கூறுகையில், இந்த மாத இறுதியில், பெங்களூரில், குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. மழைக்காலம் போல, குளிர்காலத்தை கணிப்பது எளிமை கிடையாது. இப்போது குளிர்காலம் துவங்கிவிட்டதாக கூற முடியாது. ஏனெனில், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை, என்றார்.