ஓ காட்... தேவ கவுடா குடும்பத்திடமிருந்து ஒக்கலிகா வாக்கு வங்கியை கபளீகரம் செய்கிறதா காங்.?
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவக்குமார் கைதுக்கு எதிராக ஒக்கலிகா சமூகம் பெங்களூருவில் பெருந்திரளாக திரண்டிருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதுவரை தேவகவுடா வசம் இருந்த ஒக்கலிகா வாக்கு வங்கி அப்படியே காங்கிரஸுக்கு ஆதரவாக மொத்தமாக திரும்பியிருக்கிறது என்றே சொல்லலாம்..
கர்நாடகாவில் ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து சமூகங்கள் பெரும்பான்மையினராக உள்ளன. இதில் லிங்காயத்துகள் நீண்டகாலமாக பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்து வருகின்றனர்.
லிங்காயத்துகளின் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் சாய்க்கும் வகையில் தனிமத அந்தஸ்து கோரிக்கை போராட்டத்தை நடத்திப் பார்த்தது காங்கிரஸ். ஆனால் அது கை கொடுக்கவில்லை. லிங்காயத்துகள் தொடர்ந்தும் பாஜகவையே ஆதரிக்கின்றனர்.
டிகே சிவகுமார் கைதுக்கு எதிராக போராட்டம்; மோடி- அமித்ஷாவுக்கு ஒக்கலிகா சங்கம் எச்சரிக்கை!
திசை மாறிய வாக்கு வங்கி
லோக்சபா தேர்தலின் போது ஒக்கலிகா சமூக வாக்குகளை அறுவடை செய்துவிட பாஜக முனைப்பு காட்டியது. இதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. அப்போது தேவ கவுடா குடும்பத்தின் வசம் இருந்த ஒக்கலிகா வாக்கு வங்கி பாஜகவை நோக்கி திசைமாறத் தொடங்கியது.
மண்ணை அள்ளி போட்ட பாஜக
ஆனால் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த குமாரசாமி அரசை கவிழ்த்து தன் தலைமையில் தானே மண்ணை அள்ளிப் போட்டது பாஜக. அத்துடன் பாஜக நிற்கவில்லை.
சிவகுமார் கைது
குமாரசாமி அரசை காப்பாற்றுவதற்காக போராடிய ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தூக்கி சிறையில் அடைத்தது. அவரது மகளுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது அமலாக்கத்துறை.
பெங்களூரு ஸ்தம்பித்தது
இது ஒக்கலிகா சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது என்பதையே இன்றைய பெங்களூரு பேரணி நிரூபித்திருக்கிறது. ஒக்கலிகா சமூகமே ஒன்று திரண்டு இப்போது காங்கிரஸ் கட்சிக்காக வீதியில் இறங்கியிருக்கிறது. இனி எந்த காலத்திலும் பாஜகவுக்கு ஒக்கலிகா சமூகம் வாக்களிக்காது என்பதைத்தான் பெங்களூரு பேரணி வெளிப்படுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக காங். ஆதரவு
தங்களது பரம எதிரியாகிவிட்ட பாஜகவை வீழ்த்த தேவகவுடா குடும்பத்தை நம்புவதை விட காங்கிரஸ்தான் நல்ல வாய்ப்பு என்பதை ஒக்கலிகா சமூகம் உணர்ந்திருக்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இன்றைய பெங்களூரு பேரணி. இன்றைய பேரணி மூலம் காங்கிரஸ் கட்சியானது கர்நாடகாவில் முழுவீச்சில் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.