ஆட்சியை இழந்த கையோடு அடித்துக் கொள்ளும் காங்கிரஸ்-மஜத.. உடைகிறதா கூட்டணி?
பெங்களூர்: ஆட்சியை இழந்த கையோடு, கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னால் ஒரு கூட்டணியை அமைத்து பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றன. 37 சீட்டுகளே வென்ற மஜத தலைவர் குமாரசாமி முதல்வராகும் யோகம் கிட்டியது.
இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், சமீபத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று ஆட்சியை பறி கொடுத்தார் குமாரசாமி. தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கூட்டணிக்குள் குந்தகம்
ஆட்சி கவிழ்ந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ்-மஜத கூட்டணிக்குள் விரிசல் அதிகரித்துள்ளது. இரு கட்சிகளுமே ஜென்ம விரோதிகள் போல செயல்பட்ட நிலையில், லோக்சபா தேர்தலில் இணைந்து மக்களிடம் சென்றன. ஆனால், ஹாசன் தொகுதி மஜதவுக்கும், பெங்களூர் ஊரக தொகுதி காங்கிரசுக்கும் கிடைத்ததே தவிர பிற அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிக் கொடி நாட்டியது. அதற்கு பிறகு கூட்டணிக்குள் விரிசல் அதிகரித்தது.
மைசூர் பிராந்தியம்
மைசூர் பிராந்தியத்தில் மஜத பலமாக உள்ளது. அங்கு காங்கிரசுக்கும் மஜதவுக்கும்தான் எப்போதும் நேரடி போட்டி உண்டு. பாஜக அங்கே வீக்காக இருந்தது. ஆனால், இரு கட்சிகளும் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டதால், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை. ஒருவருக்கொருவர் காலை வாரிக் கொண்டனர். இதுதான் லோக்சபா தேர்தல்களில் ஏற்பட்ட சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
போட்டி
இந்த நிலையில், தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்களுக்கான தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும்போது அங்கு, காங்கிரஸ், மஜத இருவரும் தனித்தனியாக களமிறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மஜத எம்எல்ஏக்கள் வென்ற தொகுதிகளில் காங்கிரசும் வேட்பாளரை களமிறக்கும் என்று அக்கட்சி இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் கூறியுள்ளது எரியும் நெருப்பில் நெய் ஊற்றியதை போல மாறியுள்ளது.
தனித்து போட்டி
மஜத மூத்த தலைவர் தன்வீர் அகமது கூறுகையில், இடைத் தேர்தல் நடைபெறும்போது காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என கூறியுள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளிலும், இதே திட்டம் இருப்பது உறுதியாகிவிட்டது. எனவே இந்த கூட்டணி இனியும் ரொம்ப நாள் தொடருவது கஷ்டம் என்றே தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கும், மஜத தலைவர் தேவகவுடாவுக்கும் ஏழாம் பொருத்தம். எனவே, சித்தராமையாவும் தன்னால் முடிந்த அளவுக்கு கூட்டணியை கழற்றிவிட முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.
தேவகவுடா குடும்ப ஆதிக்கம்
ஆனால் ஆட்சி கவிழ்ந்த பிறகு, காங்கிரசை விட மஜதவுக்குதான் இழப்பு அதிகமாக உள்ளது. தேவகவுடா குடும்பத்தார் சீனியர் தலைவர்களை மதிப்பதில்லை என்ற குமுறல்கள் அதிகரித்துள்ளன. சா.ரா.மகேஷ், ஜி.டி. தேவேகவுடா மற்றும் சி.எஸ்.புட்டராஜு ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். மூத்த தலைவரான புட்டராஜு குமாரசாமியின் மகன் நிகிலால் அவமதிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே.
"தேவேகவுடா குடும்பத்தினரால் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக உணரும் மேலும் பலரும் உள்ளனர். அதனால்தான் எடியூரப்பாவின் அரசை வெளிப்படையாகவே சில மஜத தலைவர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். " இவ்வாறு தெரிவித்தார் மஜத நிர்வாகி ஒருவர்.